டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி


டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி
x
தினத்தந்தி 15 Dec 2017 4:15 AM IST (Updated: 15 Dec 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

பொங்கலூரில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொங்கலூர்,

பொங்கலூர், நாராயணநாயக்கன்புதூரை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது45). கட்டிட தொழிலாளியான இவரது மகன் இன்பச்செல்வன்(17). இவன் பொங்கலூரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான். இந்த நிலையில் கடந்த மாதம் 3-ந் தேதி காய்ச்சல் காரணமாக திருப்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவனது பெற்றோர் அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு ரத்தம் பரிசோதனை செய்ததில் இன்பச்செல்வனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 4-ந்தேதி உடல் நிலை மேலும் பாதிப்படைந்தது. எனவே மேல் சிகிச்சைக்காக இன்பச்செல்வனை திருப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் உடனடியாக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவன் பரிதாப சாவு

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்பச்செல்வனுக்கு காய்ச்சல் காரணமாக மூளை பாதிப்படைந்ததுடன் நினைவும் இழந்தான். ஆனாலும் டாக்டர்கள் தொடர்ந்து பல்வேறு விதமான சிகிச்சைகள் அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை மாணவன் இன்பச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தான். மாணவனின் சொந்த ஊர் கொடைக்கானல் என்பதால் அங்கேயே அடக்கம் செய்ய பெற்றோர் முடிவு செய்து நேற்று ஆம்புலன்ஸ் மூலம் இன்பச் செல்வன் உடலை கொடைக்கானலுக்கு எடுத்துச்சென்றனர்.

டெங்கு காய்ச்சல் காரணமாக பள்ளி மாணவன் இறந்த சம்பவம் பொங்கலூர் பகுதி மற்றும் அவன் படித்த பள்ளியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story