பூட்டிய வீடுகளில் திருட்டை தடுக்க புதிய ‘செயலி’


பூட்டிய வீடுகளில் திருட்டை தடுக்க புதிய ‘செயலி’
x
தினத்தந்தி 21 Dec 2017 11:30 PM GMT (Updated: 21 Dec 2017 7:22 PM GMT)

மதுரையில் பூட்டிய வீடுகளில் திருட்டை தடுக்கும் வகையில் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை மதுரை சரக டி.ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

மதுரை,

மதுரை புறநகர் பகுதிகளில் பூட்டிய வீடுகளில் நடக்கும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் விதமாக புதிய செயலி(ஆப்) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான அறிமுக விழா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. மதுரை சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் புதிய செயலியை அறிமுகப்படுத்தினர்.

இதைதொடர்ந்து டி.ஐ.ஜி. பிரதீப்குமார் பேசியதாவது,  மதுரை புறநகர் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன. பூட்டிய வீடுகளில் ஆள் நடமாட்டம் இருக்காது என்பதால் வீடுகளை கண்காணித்து திருட்டுகள் நடந்து வருகின்றன. இதனால் வீடுகளில் திருட்டை தடுக்க புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஒருவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்ல இருந்தால் தனது பூட்டிய வீட்டை கண்காணிக்க இந்த செயலியின் உதவியால் காவல்துறைக்கு தெரிவித்து, திருட்டை தடுக்க முடியும். “மதுரைக் காவலன்“ என்ற பெயரிலான அந்த புதிய செயலி மூலம் பூட்டியிருக்கும் வீடுகளை காவல்துறை பாதுகாப்புக்குள் கொண்டு வர முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பேசும்போது, “வெளியூர் செல்பவர்கள் தங்களது பெயர், முகவரியை ‘மதுரைக்காவலன்‘ செயலியில் பதிவு செய்து விட்டால், காவல் கட்டுப்பாட்டு அறை மூலமாக வீடு அமைந்திருக்கும் போலீஸ் நிலையத்துக்கு தகவல் சென்றுவிடும். போலீஸ் நிலையத்தில் இருந்து செல்போனுக்கு தொடர்பு கொண்டு உறுதி செய்யப்பட்ட பின்பு, வீடுகளில் தொடர் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்படும்.

மேலும் தங்கள் பகுதியில் சந்தேகத்துக்குரிய நபர்கள் நடமாட்டம் இருந்தால், செல்போன் மூலமாக அவர்களை படம் எடுத்து ‘மதுரைக்காவலன்‘ செயலி மூலம் அனுப்பி வைத்தால், அந்த நபர் குற்றப்பின்னணி உடையவரா? என்பது குறித்த தகவல்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும். இதில் காவல்துறை நிகழ்வுகள், விழிப்புணர்வு செய்திகளும் இடம் பெறும். இந்த செயலி தொடர்பாக பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்“ என்றார்.

இந்த செயலியை வடிவமைத்த தினேஷ்பாண்டியன் கூறும்போது, கூகுள் பிளே ஸ்டோரில் சென்று ‘மதுரைக்காவலன்‘ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் பெயர், மின்னஞ்சல், செல்போன் எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். மேலும் ‘பூட்டிய வீட்டை கவனிக்க‘ என்ற தலைப்பில் பதிவு செய்தால் அந்த தகவல் காவல்துறை கட்டுப்பாட்டுக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்படும். இதனால் வெளியூர்களுக்கு செல்வோர் திருட்டு பயமின்றி நிம்மதியாக இருக்கலாம். மேலும், இந்த செயலியில் போலீஸ் நிலையங்களின் தொடர்பு எண்கள், அதிகாரிகளின் தொடர்பு எண்கள், புகார் பெட்டி ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன், நரசிம்மவர்மன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story