ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை பக்தர்கள் சாமி தரிசனம்


ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 1 Jan 2018 10:30 PM GMT (Updated: 1 Jan 2018 9:30 PM GMT)

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வேலூரில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வேலூர்,

ஆங்கில புத்தாண்டு நேற்று கொண்டாடப்பட்டது. புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

வேலூர் கோட்டையில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலையில் கோவில் திறக்கப்பட்டு சாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு தங்க கவசம் அணிவித்து, சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை செய்யப்பட்டது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள்

அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். நேரம் செல்லசெல்ல கூட்டம் அதிகரித்தது. பக்தர்கள் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்டவரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இதனால் நேற்று கோட்டைக்கு வெளியேயும், உள்ளேயும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பெரும்பாலானவர்கள் கார்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் வந்திருந்தனர். கோட்டைக்குள் செல்லவும், வெளியே வரவும் ஒரே பாதையில்தான் செல்லவேண்டும் என்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் வாகனங்களும், பொதுமக்களும் கோட்டைக்குள் செல்லவும், வெளியே வரவும் முடியாமல் நெரிசலில் சிக்கி தவித்தனர். பின்னர் போலீசார் சென்று நெரிசலை சரிசெய்தனர்.

ரத்தினகிரி

ரத்தினகிரி பாலமுருகன் கோவிலிலும் நேற்று புத்தாண்டை முன்னிட்டு, பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் முருகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அதேபோன்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். 

Next Story