ரிஷிவந்தியம் தொகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்


ரிஷிவந்தியம் தொகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்
x
தினத்தந்தி 15 Jan 2018 11:00 PM GMT (Updated: 15 Jan 2018 8:38 PM GMT)

ரிஷிவந்தியம் தொகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும், அரசுக்கு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கோரிக்கை

திருக்கோவிலூர்,

ரிஷிவந்தியம் தொகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கவேண்டும் என்று ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி முற்றிலும் விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ள தொகுதி ஆகும். இந்த தொகுதியில் உள்ள 90 சதவீதம் விவசாயிகள் கரும்பு, நெல், மக்காச்சோளம் போன்ற பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். ஒருபுறம் கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு அதற்குரிய விலையும் கிடைப்பதில்லை.

வட்டிக்கு கடன் வாங்கியும், நகை உள்ளிட்ட பொருட்களை அடகு வைத்தும் விவசாயிகள் நெல் பயிரிட்டு, அதனை அறுவடை செய்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு எடுத்து சென்று விற்பனை செய்யும்போது, அங்கு வியாபாரிகள் வேண்டுமென்றே விலையை குறைத்து கேட்கின்றனர். இதனால் விவசாயிகள் பெரிய அளவில் நஷ்டத்தை சந்திக்கின்றனர். ஏற்கனவே விவசாயம் செய்வதே கஷ்டம் என்ற சூழலில் அதனை அறுவடை செய்து விற்பனைக்கு எடுத்து வரும்போது இதுபோன்ற விலைகுறைப்பு, விற்ற நெல்லுக்கு பணம் பெறுவதில் அலைக்கழிப்பு போன்றவற்றால் விவசாயிகள் பெரிய அளவில் அவதிக்குள்ளாகின்றனர்.

எனவே தமிழக அரசு ஒவ்வொரு நெல் ரகத்திற்கும் உரிய விலையை நிர்ணயம் செய்து அதன்படிதான் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் கொள்முதல் செய்யவேண்டும் என்ற கடுமையான உத்தரவை பிறப்பிக்கவேண்டும். விவசாயிகளின் கஷ்டத்தை அரசு புரிந்து கொண்டு இந்த விலை நிர்ணய அறிவிப்பை வெளியிடவேண்டும்.

அத்துடன் தற்போது அறுவடை தொடங்கி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிற வேளையில் இதுநாள் வரை எங்களது தொகுதியில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. அவ்வாறு திறந்தால் விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும். பணமும் உடனுக்குடன் கிடைத்துவிடும். எனவே விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு ரிஷிவந்தியம் தொகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிடவேண்டும்.

மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Next Story