திருமணம் செய்வதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த இளம்பெண் சுருதிக்கு 2 தொழில் அதிபர்களுடன் தொடர்பு இருப்பது அம்பலம்


திருமணம் செய்வதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த இளம்பெண் சுருதிக்கு 2 தொழில் அதிபர்களுடன் தொடர்பு இருப்பது அம்பலம்
x
தினத்தந்தி 16 Jan 2018 12:00 AM GMT (Updated: 15 Jan 2018 8:57 PM GMT)

திருமணம் செய்வதாக கூறி பலகோடி ரூபாய் மோசடி செய்த இளம்பெண் சுருதிக்கு கோவையை சேர்ந்த 2 தொழில் அதிபர்களுடன் தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது.

கோவை,

கோவை பாப்பநாயக்கன்பாளையம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் சுருதி (வயது 21). இவர் திருமண ஆசைகாட்டி என்ஜினீயர்கள், பணக்கார வாலிபர்களை மடக்கி பலகோடி ரூபாய் மோசடி செய்தார். இதில் பாதிக்கப்பட்ட என்ஜினீயர் பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் சுருதியை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் சுருதியின் தாயார் சித்ரா, அவருடைய 2-வது கணவர் பிரசன்னா வெங்கடேஷ், தம்பி சுபாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

சுருதியிடம் இருந்து 15 விலை உயர்ந்த செல்போன்கள், ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கம், வைர நகைகள், ரூ.4 லட்சம் மதிப்பிலான மேக்-அப் செட் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

சுருதியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் எண்கள் மூலம் அவர் எத்தனை பேரிடம் தொடர்பு வைத்து, பேசி வந்தார் என்பது குறித்த பட்டியலை போலீசார் தயார் செய்து வருகிறார்கள். இதற்கிடையே சுருதி திருமண ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியதாக அமெரிக்காவில் என்ஜினீயராக பணியாற்றி வரும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இசக்கிமுத்து உள்பட 11 பேர் புகார் செய்து உள்ளனர். இந்த நிலையில் சுருதியின் முகநூலை (பேஸ்புக்) போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அவருடைய கவர்ச்சி படங்கள் அதிகளவில் இருந்தன. மேலும் நண்பர்கள் பலரிடம் சேர்ந்து கவர்ச்சி நடனமாடுவதுபோன்ற வீடியோக்களும் இருந்தன. வேறு யாரும் அந்த படங்களை பார்த்து ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக போலீசார் சுருதியின் முகநூலை முடக்கி உள்ளனர். தற்போது சிறையில் இருக்கும் சுருதியை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

பார்ப்பதற்கு அழகாக இருந்த சுருதியை பார்த்தும் கோவையை சேர்ந்த 2 தொழில் அதிபர்கள் மயங்கி உள்ளனர். இதனால் அவர்கள் இருவருமே அவரிடம் தொடர்பு வைத்துள்ளது அம்பலமாகியுள்ளது. ஆனால் அது அவர்கள் இருவருக்கும் தெரியாது. இவர்கள் 2 பேரும் பிரபல தொழில் அதிபர்கள் என்பதால், அவர்களிடம் பலமுறை சுருதி பணம் பறித்துள்ளார். அவர்கள் இருவரும்தான் போலீஸ் வழக்குகளில் இருந்து தப்பித்து செல்ல உதவியாக இருந்துள்ளனர்.

எனவே அந்த தொழில் அதிபர்கள் இருவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சுருதியின் வங்கி கணக்கை சோதனை செய்தபோது அதில் பணம் இல்லை. அவர் பல சினிமா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உள்ளதால், பலரிடம் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்து சினிமா தயாரிக்க பணம் கொடுத்து இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே அவருக்கு தெரிந்த துணை நடிகர்கள், சினிமா தயாரிப்பாளர்கள் ஆகியோரிடம் விசாரிக்க முடிவு செய்து உள்ளோம்.

இது தொடர்பாக சுருதியிடம் விசாரணை நடத்தினால்தான், அவரிடம் தொடர்புள்ள துணை நடிகர்கள், சினிமா தயாரிப்பாளர்கள் யார் என்பது தெரியவரும். எனவே அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளோம். இதற்காக ஓரிரு நாட்களில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். மேலும் சுருதியால் பாதிக்கப்பட்டவர்கள் தாராளமாக புகார் செய்யலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

Next Story