கோவையில் வடமாநில வியாபாரி கட்டையால் அடித்து கொலை


கோவையில் வடமாநில வியாபாரி கட்டையால் அடித்து கொலை
x
தினத்தந்தி 15 Jan 2018 10:45 PM GMT (Updated: 15 Jan 2018 9:06 PM GMT)

கோவையில் வடமாநில வியாபாரி கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

போத்தனூர்,

உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் சோஹில் (வயது 27). இவர் கோவையில் கம்பளி போர்வை வியாபாரம் செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை வியாபாரத்துக்காக குனியமுத்தூர் திருநகர் காலனி பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா (24). என்பவர் கம்பளி போர்வை வாங்குவதற்காக சோஹிலை தடுத்து நிறுத்தினார். பின்னர் சோஹிலிடம் தகராறு செய்துள்ளார்.

இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கார்த்திக் ராஜா குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திக் ராஜா கீழே கிடந்த கட்டையை எடுத்து சோஹிலை தாக்கினார்.

இதனால் தலையில் பலத்த காயமடைந்த சோஹில் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் கார்த்திக் ராஜா தலைமறைவானார். இதுகுறித்து தகவல் அறிந்து குனியமுத்தூர் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் நடந்த இடத்தில் போலீஸ் துணை கமிஷனர் லட்சுமி நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கார்த்திக் ராஜா கோவையில் உள்ள ஒரு ஒர்க்‌ஷாப்பில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தது தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story