திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா
x
தினத்தந்தி 15 Jan 2018 11:00 PM GMT (Updated: 15 Jan 2018 9:16 PM GMT)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு அடுத்த நாள் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வரலாறு கூறப்படுகிறது. முன்னொரு காலத்தில் பிருங்கி என்ற முனிவர் வசித்து வந்தார். அவர் அண்ணாமலையாரை மட்டுமே வணங்கி வந்துள்ளார். ஒரு சமயத்தில் அண்ணாமலையாரும், அம்மனும் ஒன்றாக இருந்தபோது அவர் வண்டு உருவில் அண்ணாமலையாரை மட்டும் சுற்றி வந்து வணங்கி இருக்கிறார். இதனால் சாமிக்கும் அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு பின்னர் கூடல் ஏற்பட்டதாக வரலாறு உள்ளது. இந்த ஊடல் மற்றும் கூடலை விளக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுகிறது.

அதன்படி பொங்கலுக்கு மறுநாளான நேற்று இந்த விழா நடந்தது. இதனையொட்டி அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு சாமி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது. மேலும் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்திகளுக்கு வடை, அதிரசம், முருக்கு, காய், கனிகளாலும் மாலைகளைக் கொண்டும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

திருவூடல் திருவிழா

இந்த நிலையில் அதிகாலையில் நந்திக்கு தரிசனம் கொடுத்து விட்டு திட்டி வாயிலில் சூரிய பகவானுக்கும் காட்சி கொடுத்து மாடவீதியை 3 முறை சாமி, அம்மன், சண்டிகேஸ்வரர் சுற்றி வந்தனர்.

அதைத்தொடர்ந்து இரவு 7 மணி அளவில் திருவூடல் தெருவில் திருவூடல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவூடல் திருவிழாவின்போது சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டதையடுத்து அம்மன் மீண்டும் கோவிலுக்கு சென்று விட்டார்.

அண்ணாமலையார் மட்டும் குமரக்கோவிலுக்கு சென்று விட்டார். அங்கிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) பக்தர்கள் கிரிவலம் செல்வது போன்று அண்ணாமலையார் கிரிவலம் செல்வார். கிரிவலம் முடித்து விட்டு கோவிலுக்கு வரும்போது சாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தின் அருகே மறுவூடல் நடக்கும். இதனுடன் திருவூடல் திருவிழா முடிகிறது.

தாமரை குளத்தில் தீர்த்தவாரி

நேற்று விடுமுறை என்பதால் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று முன்தினம் உத்தராயண புண்ணியகால உற்சவத்தின் 10-ம் நாள் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் தாமரை குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. 

Next Story