வேலூரில் காளை விடும் திருவிழா


வேலூரில் காளை விடும் திருவிழா
x
தினத்தந்தி 15 Jan 2018 10:45 PM GMT (Updated: 15 Jan 2018 9:16 PM GMT)

வேலூரில் காளை விடும் திருவிழா

வேலூர்,

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு நேற்று வேலூர் சத்துவாச்சாரியில் மாடுவிடும் திருவிழா நடந்தது. ரங்காபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதற்காக காளைகள் அலங்கரித்து அழைத்து வரப்பட்டிருந்தன. காளைகளை விரட்டுவதற்காக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரண்டிருந்தனர். காளைகள் விரட்டப்படுவதை காண பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பும், வீட்டு மாடிகளிலும் குவிந்திருந்தனர். விழா தொடங்கியதும் ஒவ்வொரு மாடாக விரட்டப்பட்டன. இளைஞர்கள் மாடுகளை விரட்டினர். இதில் 40-க்கும் மேற்பட்ட காளைககள் விரட்டப்பட்டன.

அதேபோன்று அலமேலுரங்காபுரத்தில் அந்தப்பகுதியில் உள்ள காளைகள் மற்றும் பசுமாடுகள் என அனைத்து மாடுகளும் அலங்கரிக்கப்பட்டு அங்குள்ள மந்தைவெளிக்கு அழைத்துவரப்பட்டு வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டன. பின்னர் கோவிலில் பூஜை செய்யப்பட்ட மஞ்சள்நீர் அனைத்து மாடுகளுக்கும் தெளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அனைத்து மாடுகளும் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டன.

காகிதப்பட்டறை பகுதியில் உள்ள காளைகள், பசுமாடுகள் மற்றும் கன்றுக்குட்டிகள் என நூற்றுக்கணக்கான மாடுகள் அலங்கரிக்கப்பட்டு ரோட்டின் ஓரமாக வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அனைத்துமாடுகளுக்கும் பூஜைகள் செய்து கற்பூரம் காட்டப்பட்டன. இதேபோன்று பல்வேறு பகுதிகளிலும் மாடுகளுக்கு பூஜைசெய்யப்பட்டன. 

Next Story