சேலத்தில் பெண் அடித்துக்கொலை டிரைவர் உள்பட 2 பேர் கைது


சேலத்தில் பெண் அடித்துக்கொலை டிரைவர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 15 Jan 2018 10:15 PM GMT (Updated: 15 Jan 2018 9:16 PM GMT)

சேலத்தில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

சேலம் வீராணம் அருகே உள்ள கத்திரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமர், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி தனபாக்கியம் (வயது 50). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ராமருக்கும், அடிமலைபுதூர் பகுதியை சேர்ந்த ஜெயமணி என்ற பெண்ணுக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தனபாக்கியத்திற்கு தெரியவந்ததும் கணவரை கண்டித்தார். மேலும் அவர் தனது கணவரை கேரளாவிற்கு வேலைக்கு அனுப்பி விட்டார். இதற்கிடையே, கணவருடன் தொடர்பு வைத்திருந்த ஜெயமணியை பார்த்த இடங்களிலெல்லாம் தகாத வார்த்தைகளால் தனபாக்கியம் திட்டியதுடன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயமணி தனது மகன் சந்திரமோகனிடம் கூறினார்.

அடித்துக்கொலை

இந்த நிலையில் தனியார் பஸ் டிரைவரான சந்திரமோகன் நேற்று முன்தினம் தனது சித்தப்பா ராஜேந்திரன், குப்பனூரை சேர்ந்த சேட்டு ஆகியோருடன் தனபாக்கியம் வீட்டுக்கு சென்றார். இந்த நேரத்தில் வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார். இதையடுத்து அங்கு அவர்களிடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரமடைந்த சந்திரமோகன் உள்பட 3 பேரும் அங்கு கிடந்த விறகு கட்டையால் தனபாக்கியத்தை அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

2 பேர் கைது

இதுபற்றி தகவல் கிடைத்ததும் வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) பால்பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் தனபாக்கியத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரமோகன், சேட்டு ஆகியோரை பிடித்து நேற்று கைது செய்தனர். ராஜேந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story