நகராட்சி கடைகள் வாடகை உயர்வு பிரச்சினை: நிபந்தனைகளை பின்பற்றாத குத்தகைதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு அனுமதி


நகராட்சி கடைகள் வாடகை உயர்வு பிரச்சினை: நிபந்தனைகளை பின்பற்றாத குத்தகைதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 15 Jan 2018 10:15 PM GMT (Updated: 15 Jan 2018 9:18 PM GMT)

விருதுநகர் நகராட்சி கடைகளுக்கான வாடகை உயர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் கோர்ட்டு விதித்துள்ள நிபந்தனைகளை பின்பற்றாத குத்தகைதாரர்கள் மீது நகராட்சி நிர்வாகம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என மதுரை ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் நகராட்சி கடைகளில் குத்தகைதாரர்களான முகமதுபாஷா, தினகரன்போஸ், முகமது யூசுப், செய்யது அபுதாகீர்அலி, தாமீமுன்அன்சாரி, ஹருண்ரஷீத், முனிராஜ்பாண்டியன், முகமதுஅலி, முகமது யாசர் சிக்கந்தர், அராபத், பெரியசாமி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுக்களில் குறிப்பிட்டு இருந்ததாவது:-

எங்களுக்கான குத்தகை காலம் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் மற்றும் ஏப்ரல் மாதங்களில் முடிவடையும் நிலையில் கடந்த 22.5.2017அன்று நகராட்சி நிர்வாகம் எங்கள் கடைகளுக்கான வாடகையை உயர்வு செய்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகத்தின் இந்த வாடகை உயர்வுக்கான நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதி மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி கடந்த 2.2.2009 அன்று தமிழக அரசு சுற்றறிக்கையின் மூலம் நகராட்சி கடை வாடகைதாரர்களுக்கு வாடகை உயர்வு செய்வதற்கு முன்னர் அவர்களுக்கு உரிய அறிவிப்பு கொடுத்து வாடகை உயர்வு செய்ய வேண்டும் என தெரிவித்து இருந்தது.

அதனை தொடர்ந்து கடந்த 6.2.2009 அன்று மதுரை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சு நகராட்சி நிர்வாகங்கள் வாடகை உயர்வு செய்வதற்கான நிபந்தனைகளை விதித்து ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதும் கீழ் கண்டவாறு நிபந்தனைகளுடன் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

விருதுநகர் நகராட்சி நிர்வாகம் மனுதாரர்களுக்கு வாடகை உயர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவில் கணக்கீட்டு விவரங்களை அவர்களுக்கு வழங்க வேண்டும். மனுதாரர்கள் இந்த உத்தரவு நகல் கிடைத்த 2 வாரங்களுக்குள் உயர்வு செய்யப்பட்ட வாடகையில் 50 சதவீத தொகையை நகராட்சி நிர்வாகத்துக்கு செலுத்த வேண்டும். அதனுடன் 2 வாரங்களுக்குள் வாடகை உயர்வு செய்ததற்கு தங்களது ஆட்சேபனைகளை உரிய ஆவணங்களுடன் நகராட்சிநிர்வாகத்துக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

நகராட்சி நிர்வாகம் மனுதாரர்கள் 50 சதவீத வாடகை தொகையினை செலுத்திவிட்டதை உறுதி செய்த பின்னர் அவர்கள் தெரிவித்துள்ள ஆட்சேபனைகளை பரிசீலனை செய்து சட்டவிதிகளின்படி வாடகையை நிர்ணயமோ அல்லது மறுநிர்ணயமோ செய்ய வேண்டும். மனுதாரர்கள் கோர்ட்டு விதித்துள்ள இந்த நிபந்தனைகளை பின்பற்றாத நிலையில் நகராட்சி நிர்வாகம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

Next Story