தண்ணீர் பாத்திரத்தில் மூழ்கி 1¼ வயது குழந்தை சாவு


தண்ணீர் பாத்திரத்தில் மூழ்கி 1¼ வயது குழந்தை சாவு
x
தினத்தந்தி 15 Jan 2018 11:00 PM GMT (Updated: 15 Jan 2018 9:20 PM GMT)

ஈத்தாமொழி அருகே தண்ணீர் பாத்திரத்தில் மூழ்கி 1¼ வயது பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது.

ஈத்தாமொழி,

ஈத்தாமொழி அருகே நங்கூரான்பிலாவிளையை சேர்ந்தவர் சிவா என்கிற சுரேஷ் (வயது33), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (28). இவர்களுக்கு சிவானி (7), சிவலக்சனா (1¼) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உண்டு.

சுரேஷ் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை ஆடுகளை மேய்ப்பதற்காக சுரேஷ் சென்றார். ராஜேஸ்வரி, வீட்டின் வெளியே உறவினரிடம் பேசிக்கொண்டிருந்தார். இரண்டு குழந்தைகளும் வீட்டில் விளையாடி கொண்டிருந்தனர்.

சிறிது நேரம் கழித்து ராஜேஸ்வரி வீட்டுக்குள் சென்ற போது, 1¼ வயது குழந்தை சிவலக்சனாவை காணவில்லை. இதனால், பதற்றமடைந்த அவர் வீடு முழுவதும் தேடினார். அப்போது, வீட்டில் தண்ணீர் வைத்திருந்த பாத்திரத்தில் சிவலக்சனா தலை கீழாக மூழ்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தவழ்ந்து சென்று தண்ணீர் பாத்திரத்தில் தலைகீழாக விழுந்ததாக தெரிகிறது.

உடனே, குழந்தையை தூக்கி கொண்டு அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்து ஈத்தாமொழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story