இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும் தவறினால் கடும் நடவடிக்கை, கலெக்டர் எச்சரிக்கை


இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும் தவறினால் கடும் நடவடிக்கை, கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 15 Jan 2018 9:45 PM GMT (Updated: 15 Jan 2018 9:41 PM GMT)

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே எச்சரித்துள்ளார்.

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு 4,619 சாலை விபத்துகளும், 2017-ம் ஆண்டு சுமார் 3,610 சாலை விபத்துகளும் நடந்துள்ளது. இதில் 2016-ம் ஆண்டில் 429 பேரும், 2017-ம் ஆண்டில் 358 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

சாலை விதிகளை கடைபிடிக்காததினால் தான் இந்த விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் சாலை விதிமீறல்களுக்காக கடந்த 2017-ம் ஆண்டில் 3,719 வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

எனவே வாகன ஓட்டிகள் கண்டிப்பாக சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். குறிப்பாக சமீபகாலமாக நடந்த சாலை விபத்துகளில் இருசக்கர வாகனத்தை ஓட்டியவர்களும், பின்னால் அமர்ந்து பயணம் செய்தவர்களும் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

எனவே இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் தலைக்கவசம்(ஹெல்மெட்) அணிய வேண்டும். அதிலும் இந்திய தரநிர்ணய சான்று பெற்ற தலை கவசம் மட்டுமே அணிய வேண்டும். இல்லையேல் அந்த வாகனத்தின் அனைத்து ஆவணங்கள் மற்றும் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.

அதேபோல் நான்குசக்கர வாகனங்களை ஓட்டும் ஓட்டுனர்களும், பயணிகளும் கண்டிப்பாக ‘சீட் பெல்ட்’ அணிய வேண்டும். செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்டக்கூடாது, மது அருந்தி விட்டு வாகனங்களை இயக்கக்கூடாது, வாகனங்களில் அதிகபாரம் ஏற்றிச்செல்லக்கூடாது. தவறும் பட்சத்தில் போக்குவரத்து விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்ட வாகனத்தின் அனைத்து ஆவணங்கள் மற்றும் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்து உள்ளார். 

Next Story