பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பயணிகள் குவிந்தனர்


பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 15 Jan 2018 9:45 PM GMT (Updated: 15 Jan 2018 9:43 PM GMT)

பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் ஏராளமான பயணிகள் குவிந்தனர்.

பரங்கிப்பேட்டை,

சிதம்பரம் அருகே கிள்ளையில் பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இந்த சுற்றுலா மையம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்குள்ள உப்பனாற்றின் அருகில் மருத்துவ குணம் கொண்ட சுரப்புன்னை காடுகள் அடர்ந்து காணப்படுகிறது. இந்த காடுகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால்கள் உள்ளன.

மருத்துவ குணம் நிறைந்த சுரப்புன்னை காடுகளை பார்த்து ரசிப்பதற்காக வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

இந்த நிலையில் தற்போது பொங்கல் விடுமுறையையொட்டி கடந்த 2 நாட்களாக பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு பயணிகளின் வருகை அதிக அளவில் உள்ளது. இவர்கள் துடுப்பு படகு மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட படகில் சவாரி செய்து சுரப்புன்னை காடுகளின் அழகை ரசித்து பார்த்தனர். மேலும் சிலர் சுற்றுலா மைய வளாகத்தில் உள்ள உயர்மின் கோபுரத்தில், நின்று சுரப்புன்னை காடுகளை படம் பிடித்து சென்றனர்.

இதையடுத்து சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வந்த உணவுகளை அங்குள்ள குடில்களில் அமர்ந்து குடும்பத்துடன் சாப்பிட்டனர். பொங்கல் விடுமுறையையொட்டி ஏராளமான பயணிகள் வந்திருந்ததால் பிச்சாவரம் சுற்றுலா மையம் பரபரப்பாக காணப்பட்டது. 

Next Story