தேவேகவுடா முன்னிலையில் பா.ஜனதா முன்னாள் மந்திரி ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இணைந்தார்


தேவேகவுடா முன்னிலையில் பா.ஜனதா முன்னாள் மந்திரி ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இணைந்தார்
x
தினத்தந்தி 15 Jan 2018 10:12 PM GMT (Updated: 15 Jan 2018 10:12 PM GMT)

தேவேகவுடா முன்னிலையில் பா.ஜனதா முன்னாள் மந்திரி ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இணைந்தார்.

பெங்களூரு, 

பா.ஜனதா கட்சியின் முன்னாள் மந்திரி ஆனந்த் அஸ்னோடிகர். அந்த கட்சியில் இருந்து விலகிய அவர், ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இணைய போவதாக அறிவித்தார். இந்த நிலையில் நேற்று ஆனந்த் அஸ்னோடிகர், பெங்களூருவில் உள்ள தேவேகவுடாவின் இல்லத்தில் அவருடைய முன்னிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இணைந்தார். இதில், ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து தேவேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த நல்ல நாளில் ஆனந்த் அஸ்னோடிகர் எங்கள் கட்சியில் இணைந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதன் மூலம் கார்வார் மாவட்டத்தில் எங்கள் கட்சியின் பலம் மேலும் அதிகரித்து உள்ளது. அந்த மாவட்டத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதிகள் வரை எங்கள் கட்சி வெற்றி பெறுவதற்காக ஆனந்த் அஸ்னோடிகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கடுமையாக உழைப்பார்கள்.

சாத்தியமில்லை

ஜனதா தளம்(எஸ்) கட்சி தந்தை-மகன்கள் கட்சி என பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். உண்மையில் காங்கிரஸ் கட்சி தான் அந்த வகையை சேர்ந்தது. இந்த தேர்தலில் அதிக தொகுதியில் நாங்கள் வெற்றி பெற்று எங்கள் சொந்த பலத்தில் ஆட்சியை அமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கள் கட்சியை சிலர் அழிக்க முயன்று வருகின்றனர். ஆனால் எங்கள் கட்சியை அழிப்பது சாத்தியமில்லை.

எங்கள் கட்சியின் பலம் என்ன என்பதை வருகிற ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நிரூபிப்போம். இந்துத்துவா பெயரில் சிலர் பிரச்சினை செய்து வருகின்றனர். நாங்கள் அனைத்து மதநம்பிக்கையையும் மதிக்கிறோம்.

தொடர்ந்து குரல் கொடுப்பேன்

மகதாயி நதிநீர் பிரச்சினை குறித்து நான் பிரதமர் மோடியை சந்தித்து சுமுக தீர்வை எட்டும்படி கூறினேன். ஆனால் இதுவரை அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை. காவிரி பிரச்சினையில் நான் உண்ணாவிரதம் இருந்தேன் எனவும், மகதாயி பிரச்சினைக்காக நான் போராடவில்லை எனவும் பலர் கூறி வருகின்றனர். காவிரி பிரச்சினையில் நமக்கு ஏற்பட்ட பாதகமான சூழ்நிலை போல மகதாயி பிரச்சினையில் ஏற்படவில்லை.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் கட்டாயமாக மகதாயி பிரச்சினைக்காக நான் உண்ணாவிரதம் இருப்பேன். மேலும் மகதாயி பிரச்சினை குறித்து நான் தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story