குர்லா ரெயில் நிலையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி


குர்லா ரெயில் நிலையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 15 Jan 2018 10:17 PM GMT (Updated: 15 Jan 2018 10:17 PM GMT)

குர்லா ரெயில் நிலையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை, 

மும்பை மாட்டுங்கா ரெயில்வே போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்து வருபவர் ரமேஷ் மேஷ்ராம்(வயது51). இவர் நேற்று மதியம் 12 மணி அளவில் குர்லா ரெயில் நிலைய 1-வது பிளாட்பாரத்திற்கு வந்தார். அப்போது மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து தானே நோக்கி வந்த மின்சார ரெயில் பிளாட்பாரத்திற்குள் நுழைந்தது.

அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மேஷ்ராம் திடீரென ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள தண்டவாளத்தில் குதித்தார்.

ரெயில் மோதி விபத்து

இதனை கண்ட மோட்டார் மேன் ரெயிலின் வேகத்தை குறைத்து நிறுத்தினார். இருப்பினும் ரெயில் அவர் மீது லேசாக மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இது பற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் உடனடியாக விரைந்து சென்று தண்டவாளத்தில் கிடந்த ரமேஷ் மேஷ்ராமை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து அவரின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story