திருவள்ளுவர் தினம்: சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை


திருவள்ளுவர் தினம்: சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை
x
தினத்தந்தி 15 Jan 2018 11:45 PM GMT (Updated: 15 Jan 2018 10:26 PM GMT)

திருவள்ளுவர் தினத்தையொட்டி புதுவை பஸ் நிலைய பகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி, மற்றும் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி,

புதுவை அரசு சார்பில் திருவள்ளுவர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுவை பஸ் நிலைய பகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

சிலைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி, அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ., டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் ஆகியோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

தி.மு.க.வினர் தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, நிர்வாகிகள் தைரியநாதன், சக்திவேல், மாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக தி.மு.க.வினர் லப்போர்த் வீதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் திருவள்ளுவரின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பாரதீய ஜனதா கட்சியினர் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம், பொதுச்செயலாளர் தங்க.விக்ரமன், பொருளாளர் சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திராவிடர் கழகத்தினர் மாநில தலைவர் சிவ.வீரமணி தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் மண்டல செயலாளர் அறிவழகன், உழவர்கரை நகராட்சி தி.க. தலைவர் துளசிராமன், பொதுக்குழு உறுப்பினர் பழனி உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் தமிழ் அமைப்புகளை சேர்ந்த பலரும் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

புதுவை திருக்குறள் மன்றம் (புதிமம்) சார்பில் நோணாங்குப்பத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் திருக்குறள் மன்ற துணைத்தலைவர் சுந்தர லட்சுமிநாராயணன், செயலாளர் சிவ.மாதவன், பொருளாளர் செல்வகாந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருவள்ளுவர் மன்றம் சார்பில் செயலாளர் ராமலிங்கன் தலைமையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பொருளாளர் அண்ணா திருமலிங்கம், செயற்குழு உறுப்பினர்கள் அரிமா பாண்டியன், துரைமாலிறையன், அரங்க.விசயரங்கம், தமிழ்நெஞ்சன், வேணு ஞானமூர்த்தி, தமிழ்ச்செல்வன், மருதவாணன், அரங்கநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story