தமிழகத்தைப்போல் புதுச்சேரியிலும் கவர்னரை முற்றுகையிடும் போராட்டம், சிவா எம்.எல்.ஏ. உறுதி


தமிழகத்தைப்போல் புதுச்சேரியிலும் கவர்னரை முற்றுகையிடும் போராட்டம், சிவா எம்.எல்.ஏ. உறுதி
x
தினத்தந்தி 15 Jan 2018 11:15 PM GMT (Updated: 15 Jan 2018 10:26 PM GMT)

தமிழகத்தைப்போல் புதுச்சேரியிலும் கவர்னரை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று சிவா எம்.எல்.ஏ. கூறினார்.

புதுச்சேரி,

புதுவை உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. சார்பில் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம் ஆகிய முப்பெரும் விழா லப்போர்த் வீதியில் உள்ள தி.மு.க. தலைமை கழகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளரும், பிப்டிக் தலைவருமான சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க. தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை எனக்கு தெரியாத காலத்தில் என்னை அறிமுகப்படுத்தி வழிநடத்தியவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமன்தான். ஒருகட்டத்தில் ஒரு கும்பல் என்னை எதிர்த்தபோது என்னை காத்தவர்கள் உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் மக்கள்தான். அதுதான் என்னை 25 ஆண்டுகாலம் மக்கள் பணியாற்ற ஊன்றுகோலாக அமைந்தது.

அப்படிப்பட்டவர்களுக்கு நான் ஒன்றும் பெரிதாக செய்யவில்லை. வரும் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசுக்கு கவர்னர் முட்டுக்கட்டையாக இருக்கிறார். முதல்-அமைச்சர் அனைத்தையும் சமாளித்து ஆட்சி நடத்தி வருகிறார். இந்த ஆட்சிக்கு தி.மு.க. ஆதரவாக இருந்தாலும் பஸ்கட்டண உயர்வு போன்ற மக்கள் பாதிக்கின்ற போக்கினை தி.மு.க. எதிர்க்கும்.

தமிழகத்தில் சிறந்த எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். ஆனால் புதுச்சேரியில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் ரங்கசாமி என்ன செய்கிறார்? என்று யாருக்கும் தெரியவில்லை. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, பணமதிப்பிழப்பு போன்ற எதற்கும் குரல் கொடுக்காமல் மவுனம் காத்து வருகிறார். புதுச்சேரி மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு ரங்கசாமிதான் காரணம்.

அனைத்து துறைகளிலும் அளவுக்கு அதிகமான ஆட்கள் திணிப்பு, தவறான பணபரிமாற்றம் போன்றவற்றால் 16-க்கும் மேற்பட்ட அரசு சார்பு நிறுவனங்களை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. ரங்கசாமியின் தவறான நிர்வாகத்தால் புதுச்சேரி மாநிலமே ஸ்தம்பித்துள்ளது. அவரால் ஏற்படுத்தப்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் இந்த அரசு திணறுகிறது. இக்கட்டான நிலையை ஏற்படுத்திவிட்டு அவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்.

மத்தியில் அடுத்த ஆண்டு ஆட்சிமாற்றம் வரும். அதற்குள் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆட்சி மலரும். அதன் எதிரொலியாக புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் தி.மு.க. போட்டியிட்டு ஆட்சிக்கட்டிலில் அமரும். இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், ஜனநாயகத்துக்கு புறம்பாகவும் கவர்னர் கிரண்பெடி செயல்படுகிறார். அவரது செயல்பாட்டை அனைவரும் எதிர்த்தும், கண்டித்தும் வருகின்றனர்.

இருப்பினும் அவர் தனது போக்கினை மாற்றிக்கொள்ளவில்லை. இவற்றையெல்லாம் மீறி மக்களுக்கு பணி செய்ய நாம் தயாராக இருக்கிறோம். ஜனநாயகத்திற்கு எதிராக தொடர்ந்து செயல்படும் கவர்னர், ஆய்வு என்ற பெயரில் எங்கு சென்றாலும் தமிழகத்தைப்போல் புதுச்சேரியிலும் மக்களை திரட்டி தி.மு.க. மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்தும்.

இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. பேசினார்.

Next Story