திருவள்ளூர் அருகே கிணற்றில் பள்ளி மாணவர் பிணமாக மீட்பு பூந்தமல்லியில் மாயமானவர்


திருவள்ளூர் அருகே கிணற்றில் பள்ளி மாணவர் பிணமாக மீட்பு பூந்தமல்லியில் மாயமானவர்
x
தினத்தந்தி 15 Jan 2018 11:14 PM GMT (Updated: 15 Jan 2018 11:14 PM GMT)

பூந்தமல்லியில் மாயமான பள்ளி மாணவர், திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் உள்ள கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.

திருவள்ளூர்,

பூந்தமல்லி மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் சிவகுமார். வெல்டரான இவருடைய மகன் பிரவீன்குமார் (வயது 16). இவர், அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 12-ந் தேதி நண்பர்களுடன் விளையாடி விட்டு வருவதாக கூறிச்சென்ற மாணவர் பிரவீன்குமார் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவரை காணவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த கூடப்பாக்கத்தில் கூவம் ஆற்றில் உள்ள கிணற்றில் மாயமான பள்ளி மாணவர் பிரவீன்குமார் பிணமாக கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள், வெள்ளவேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

மேலும் இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பிரவீன்குமார் தனது நண்பர்களுடன் கூவம் ஆற்றில் உள்ள கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது, நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story