மும்பை போலீசாருக்கு 8 மணி நேர வேலை கமிஷனர் தொடங்கி வைத்தார்


மும்பை போலீசாருக்கு 8 மணி நேர வேலை கமிஷனர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 17 Jan 2018 10:30 PM GMT (Updated: 17 Jan 2018 10:15 PM GMT)

மும்பை போலீசாருக்கு 8 மணிநேர வேலை திட்டத்தை கமிஷனர் தத்தா பட்சல்கிகர் தொடங்கி வைத்தார்.

மும்பை,

மும்பை போலீசாருக்கு 8 மணிநேர வேலை திட்டத்தை கமிஷனர் தத்தா பட்சல்கிகர் தொடங்கி வைத்தார்.

அதிக பணிச்சுமை

மும்பையில் போலீசார் பணியின் போது உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. மேலும் போலீசார் அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தனர். அதிக பணிச்சுமை காரணமாகவே போலீசாருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படுவதாக கூறப்பட்டது. போலீசார் தினமும் சுமார் 16 மணி நேரம் தொடர்ந்து வேலை பார்ப்பதால் மனதளவில் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இதேபோல தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் கூட அவர்களால் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியாத அவலநிலை நிலவி வருகிறது.

சோதனை முயற்சி

இதையடுத்து மும்பை போலீஸ் கமிஷனர் தத்தா பட்சல்கிகர் போலீசாருக்கு 8 மணிநேர வேலை திட்டம் அறிமுகம் செய்யப்படும் என கடந்த ஆண்டு அறிவித்தார். போலீசார் 8 மணிநேர வேலை திட்டம் சோதனை முயற்சியாக தேவ்னார் போலீஸ்நிலையத்தில் தொடங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மும்பையில் உள்ள மேலும் சில போலீஸ் நிலையங்களில் 8 மணி நேர வேலை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி போலீசாருக்கு தினமும் 8 மணி நேரம் மட்டுமே வேலை ஒதுக்கப்படும்.

கமிஷனர் அறிவித்தார்


இந்தநிலையில் நேற்று மும்பையில் உள்ள அனைத்து போலீஸ்நிலையங்களில் 8 மணிநேர வேலை திட்டம் தொடங்கப்படுவதாக கமிஷனர் தத்தா பட்சால்கிகர் அறிவித்தார். முதல் கட்டமாக கான்ஸ்டபிள் மற்றும் துணை சப்-இன்ஸ்பெக்டர் தரத்தில் உள்ள போலீசாருக்கு 8 மணி நேரம் வேலை ஒதுக்கப்பட உள்ளது. பின்வரும் காலங்களில் போலீஸ் அதிகாரிகளுக்கும் 8 மணி நேரம் வேலை ஒதுக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

8 மணி நேர வேலை திட்ட அறிவிப்பு மும்பை போலீசார் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story