காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்த ரங்கசாமி முடிவு


காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்த ரங்கசாமி முடிவு
x
தினத்தந்தி 17 Jan 2018 11:30 PM GMT (Updated: 17 Jan 2018 10:51 PM GMT)

புதுவை காங்கிரஸ் அரசுக்கு எதிராக அதிரடி போராட்டங்கள் நடத்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ரங்கசாமி முடிவு செய்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை மாநில முன்னாள் முதல்-அமைச்சரும், என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் முதல்-அமைச்சராக இருந்த போது, அவரது முதல்-அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் சேலத்தில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்தார். தொடர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு தனி கட்சி தொடங்கி அந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்-அமைச்சர் ஆனார்.

இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் அவரது கட்சி தோல்வியை தழுவி ஆட்சியை இழந்தார். அதன் பின்னர் அவர் சேலத்தில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு செல்வதை தவிர்த்து வந்தார். மேலும் தீவிர அரசியல் பணி எதுவும் செய்யாமல் அமைதியாகவே இருந்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது சனிப்பெயர்ச்சி முடிந்த நிலையில் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட ரங்கசாமி முடிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் சேலம் அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

இந்த நிலையில் புதுவை மாநிலத்தில் அரசு சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் முழுமையாக செயல்படுத்தாமல் இருப்பதாகவும், இதனை கண்டித்து புதுவை அரசுக்கு எதிராக அதிரடியாக தொடர் போராட்டங்கள் நடத்த ரங்கசாமி திட்டமிட்டுள்ளார். இன்னும் ஓரிரு நாளில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிப்புகளை வெளியிட உள்ளார்.

மேலும் புதுவை மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசு உள்ளது. எனவே அவர் பா.ஜ.க.வுடன் தொடர்பினை வைத்துக்கொள்ளவும் முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் விரைவில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story