வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்கக்கூடாது - நாராயணசாமி உத்தரவு


வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்கக்கூடாது - நாராயணசாமி உத்தரவு
x
தினத்தந்தி 17 Jan 2018 11:15 PM GMT (Updated: 17 Jan 2018 10:51 PM GMT)

வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்கக்கூடாது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை சட்டமன்றத்துக்கு பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நேரடியாக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நியமனத்தை அங்கீகரிக்க சபாநாயகர் மறுத்துவிட்டார். அவர்களுக்கு உரிய சலுகைகளை வழங்கவும் மறுத்தார்.

இந்தநிலையில் எம்.எல்.ஏ.க்கள் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. மற்றும் தனலட்சுமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்படாமல் உள்ளது.

இதற்கிடையே நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு உரிய சலுகைகளை வழங்கக்கோரி தலைமை செயலாளருக்கு கடிதம் கொடுத்தனர். இந்தநிலையில் புதுவை அரசின் சார்பு செயலாளர் கண்ணன், மத்திய அரசின் வழிகாட்டுதல் கடிதம் அடிப்படையில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி சட்டசபை செயலாளருக்கும், தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கக்கோரி உள்ளாட்சித்துறை செயலாளருக்கும் கடந்த டிசம்பர் மாதம் 26-ந்தேதி கடிதம் அனுப்பினார்.

சம்பளம் வழங்குவது தொடர்பான கடிதம் சபாநாயகர் வைத்திலிங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து அவர், சம்பளம் வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது.

மேலும் சபாநாயகரால் அங்கீகரிக்கப்படாத நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்க உத்தரவு பிறப்பித்த சார்பு செயலாளர் கண்ணன் மீது அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. உரிமை மீறல் புகார் எழுப்பினார். இந்த புகார் தொடர்பாக சார்பு செயலாளர் கண்ணன் கடந்த 2-ந்தேதி சட்டமன்ற உரிமைக்குழு முன்பு ஆஜர் ஆகி விளக்கம் அளித்துள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில் நிதித்துறை செயலாளரான கந்தவேலு, மத்திய அரசால் எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்ட 3 பேருக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்று கடந்த 12-ந்தேதி கருவூலத்துறை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் நிதித்துறை பொறுப்பினை வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் கவனத்துக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி கருவூலத்துறை இயக்குனருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், சபாநாயகர் உத்தரவுப்படி நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்க முடியாது. நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் நிலையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது. அதை மீறினால் சபாநாயகரின் உத்தரவு மற்றும் ஐகோர்ட்டின் உத்தரவை மீறிய செயலாகும். இது நீதிமன்ற அவமதிப்பாக அமைந்துவிடும் என்று அந்த உத்தரவில் கூறியுள்ளார். 

Next Story