போட்டி தேர்வுகளில் வெற்றி பெற கடின உழைப்பு அவசியம் கலெக்டர் பேச்சு


போட்டி தேர்வுகளில் வெற்றி பெற கடின உழைப்பு அவசியம் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 18 Jan 2018 10:45 PM GMT (Updated: 18 Jan 2018 8:26 PM GMT)

போட்டி தேர்வுகளில் வெற்றி பெற கடின உழைப்பு அவசியம் என்று திருவண்ணாமலை கலைக்கல்லூரியில் நடைபெற்ற தொழில் நெறி வழிகாட்டும் புத்தகக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேசினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் அரசினர் கலைக்கல்லூரி இணைந்து தொழில்நெறி வழிகாட்டும் புத்தகக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் நடத்தியது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் விஜயா தலைமை தாங்கினார். சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் சந்திரன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சின்னையா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்துகொண்டு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மற்ற கல்லூரி மாணவர்களைவிட கலைக்கல்லூரி மாணவர்கள் மிகவும் புத்துணர்ச்சியுடன் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெளியே செல்லும் மாணவர்கள் தங்களுக்கு என்று ஒரு இலக்கை அமைத்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் நமக்கு என்று ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும். இதுவரை பெற்றோர், காப்பாளர்களின் நிழலில் தங்கள் வாழ்க்கை கழிந்துவிட்டது. தற்போது சரியான முடிவை எடுக்க வேண்டிய காலம் இது.

இனி வரும் காலங்களில் போட்டி தேர்வின்றி எந்த வேலையும் கிடைக்க போவது இல்லை. போட்டி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் கடின உழைப்பு அவசியம். கடின உழைப்பு என்பது அறிவு சார்ந்ததாகவும், உடல் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். எந்த காரியத்தை செய்தாலும் திட்டமிட்டு செய்ய வேண்டும்.

நாம் பொருட்களை தரம் பார்த்து வாங்கிய காலம் போய், மனிதர்களை தரம் பார்க்கும் காலம் வந்துவிட்டது. நாம் பிறந்தது, நமக்காக மட்டுமில்லை. பிறருக்காகவும் தான், அதனை மனதில் வைத்து கொண்டு நாம் நல்ல நிலைக்கு வர எண்ணுதல் வேண்டும். போட்டி தேர்வுக்கு படிப்பவர்கள் முதலில் மாதிரி வினாக்களை படிப்பதை தவிர்க்க வேண்டும்.

ஒருமுறை போட்டி தேர்வில் தோல்வி அடைந்தால் அதனை அப்படியே விட்டுவிட கூடாது. போட்டி தேர்வில் வெற்றி பெறும் வரை விடா முயற்சியுடன் இருக்க வேண்டும். விடா முயற்சியுடன் செயல்பட்டால் இலக்கை எளிதாக அடையலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த புத்தகக் கண்காட்சியை கலெக்டர் கந்தசாமி பார்வையிட்டார். முன்னதாக திருவண்ணாமலை சப்-கலெக்டர் (பயிற்சி) சுரேஷ் போட்டி தேர்வு மற்றும் ராணுவத்தில் வேலை வாய்ப்பு குறித்து கருத்துரை வழங்கினார். மாவட்ட தொழில் மைய மேலாளர் சிதம்பரம் சுயதொழில் மற்றும் தொழில் முனைதல் குறித்தும், ரமண மகரிஷி ரங்கம்மாள் மருத்துவமனை துணை இயக்குனர் தொழில் திறன் மற்றும் மாணவர்களின் திறனை வெளிக் கொணர்தல் குறித்தும் பேசினர். முடிவில் திருவண்ணாமலை இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் காஞ்சனா நன்றி கூறினார். 

Next Story