பள்ளி மாணவர்கள் மூலம் பெற்றோரிடம் உறுதிமொழி வாங்கும் திட்டம்


பள்ளி மாணவர்கள் மூலம் பெற்றோரிடம் உறுதிமொழி வாங்கும் திட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2018 10:23 PM GMT (Updated: 18 Jan 2018 10:23 PM GMT)

விபத்துகளை தடுக்க பள்ளி மாணவர்கள் மூலம் பெற்றோரிடம் உறுதிமொழி வாங்கும் திட்டத்தை போலீசார் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. விழாவுக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் முன்னிலை வகித்தார்.

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், நகர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிகாமணி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்த விழாவில் கலந்துகொண்ட அனைவரும் சாலைவிதிகளை முறையாக கடைபிடிப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்துடன் உறுதிமொழி படிவத்தை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.

அதில், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டமாட்டேன், குடிபோதையில் வாகனம் ஓட்டமாட்டேன், அதிவேகமாக வாகனம் ஓட்டமாட்டேன் என்பன உள்ளிட்ட மாணவர்களின் பெற்றோர் எடுக்க வேண்டிய உறுதிமொழிகள் இடம்பெற்றிருந்தன. மேற்கண்ட உறுதிமொழிகளை பெற்றோர் எடுப்பதுடன், அந்த படிவத்தில் தாய், தந்தை அல்லது பாதுகாவலரிடம் கையெழுத்து வாங்கி வருமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பின்னர் அந்த உறுதிமொழி படிவத்தினை பள்ளி ஆசிரியர்கள் மூலமாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல மாவட்டம் முழுவதும் பள்ளி மாணவர்கள் மூலமாக பெற்றோர்களிடம் உறுதிமொழி வாங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இதன்மூலம் விபத்துகளை தடுக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். விழா முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை ஜோஸ்பின் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

Next Story