ரூ.117 கோடி செலவில் மின்சார ரெயில்களில் கண்காணிப்பு கேமரா ரெயில்வே அதிகாரி தகவல்


ரூ.117 கோடி செலவில் மின்சார ரெயில்களில் கண்காணிப்பு கேமரா ரெயில்வே அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 18 Jan 2018 10:30 PM GMT (Updated: 18 Jan 2018 10:30 PM GMT)

ரூ.117 கோடி செலவில் மின்சார ரெயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.

மும்பை,

ரூ.117 கோடி செலவில் மின்சார ரெயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.

பயணிகள் பாதுகாப்பு

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரெயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே மும்பையில் உள்ள அனைத்து ரெயில்நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதேபோல மின்சார ரெயில்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ரெயில்வே திட்டமிட்டுள்ளது. தற்போது ஒரு சில மின்சார ரெயில்களில் பெண்கள் பெட்டிகளில் மட்டும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் அனைத்து மின்சார ரெயில் பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த மத்திய ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

கண்காணிப்பு கேமரா

இது குறித்து மத்திய ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இந்த ஆண்டிற்குள் மத்திய ரெயில்வேயில் உள்ள அனைத்து மின்சார ரெயில்களிலும் ரூ.117 கோடி செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். ஒரு பெட்டியில் 6 கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கும். மொத்தமாக மின்சார ரெயில்களில் 11 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்கப்படும்.

இதேபோல அவசர காலங்களில் மோட்டார் மேனை தொடர்பு கொள்ளும் வகையில் பெண்கள் பெட்டியில் ‘டாக்பேக்’ வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story