ஈரோட்டில் தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்


ஈரோட்டில் தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 18 Jan 2018 10:39 PM GMT (Updated: 18 Jan 2018 10:39 PM GMT)

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.

ஈரோடு,

 சுயதொழில் தொடங்கவும், நகைக்கடன் வழங்கும் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறவும் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் அடிப்படை உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கத்தின் வகை, விலையை கணக்கிடும் முறை ஆகியன குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும், உரைக்கல் மூலம் தங்கத்தின் தரம் அறிந்து கடன் தொகையை நிர்ணயம் செய்வது குறித்து செய்முறை பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி மொத்தம் 100 மணிநேரம் அளிக்கப்படுகிறது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என வாரத்தில் 2 நாட்கள் வீதம் 2 மாதங்கள் பயிற்சி வகுப்பு நடக்கும். மேலும், நகையின் தரம் கண்டறிய தேவையான ரூ.500 மதிப்புள்ள லென்ஸ், உரைக்கல் ஆகியன இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த பயிற்சி விரைவில் தொடங்கப்பட உள்ளதால் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை ஈரோடு அருகே கொங்கம்பாளையம் பிரிவு வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள யுவராஜ் பள்ளிக்கூட வளாகத்தில் செயல்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த தகவல் ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story