மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொலைநெறி தொடர்கல்வி இயக்கக நேர்முக தொடர்பு வகுப்புகள் பிப்ரவரி 17–ம் தேதி தொடங்குகிறது


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொலைநெறி தொடர்கல்வி இயக்கக நேர்முக தொடர்பு வகுப்புகள் பிப்ரவரி 17–ம் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 2 Feb 2018 8:30 PM GMT (Updated: 2 Feb 2018 7:07 PM GMT)

முதுகலை மாணவர்களுக்கான நேர்முக தொடர்பு வகுப்புகள் வருகிற 17–ம் தேதி(சனிக்கிழமை) தொடங்கி, நடைபெற உள்ளது.

நெல்லை,

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர் கல்வி இயக்ககம் இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கான நேர்முக தொடர்பு வகுப்புகள் வருகிற 17–ம் தேதி(சனிக்கிழமை) தொடங்கி, நடைபெற உள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ்பாபு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

நேர்முக தொடர்பு வகுப்புகள்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர் கல்வி இயக்ககம் நடத்தும் கல்வியாண்டு சேர்க்கை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மற்றும் வருடாந்திர சேர்க்கை இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு படிக்கும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு நேர்முக தொடர்பு வகுப்புகள் நடக்கின்றன. இந்த தொடர்பு வகுப்புகள் சனி, ஞாயிற்று கிழமைகளில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

இந்த தொடர்பு வகுப்புகள் பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில், வருகிற 17–ம் தேதி(சனிக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. அன்று மாலை 4 மணி வரை வகுப்புகள் நடைபெறும். தொடர்ந்து வருகிற 18, 24, 25 மற்றும் மார்ச் மாதம் 3, 4, 17, 18 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நடக்கிறது.

வகுப்பு அட்டவணை

மேற்கண்ட நேர்முக தொடர்பு வகுப்புகளின் அட்டவணை அனைத்து மாணவர்களுக்கும் தபாலில் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த வகுப்புகளின் அட்டவணை பல்கலைக்கழக இணையதளத்தில் (www.msuniv.ac.in) வெளியிடப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் அனைவரும் தவறாமல் தங்களது அடையாள அட்டையுடன் இந்த நேர்முக தொடர்பு வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும், என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார்.


Next Story