அறிவியல் கண்காட்சி போட்டியில் வெற்றிபெறும் மாணவர்கள் ஜப்பான் செல்ல வாய்ப்பு முதன்மை கல்வி அதிகாரி தகவல்


அறிவியல் கண்காட்சி போட்டியில் வெற்றிபெறும் மாணவர்கள் ஜப்பான் செல்ல வாய்ப்பு முதன்மை கல்வி அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 2 Feb 2018 9:00 PM GMT (Updated: 2 Feb 2018 7:10 PM GMT)

தேசிய அறிவியல் கண்காட்சி போட்டியில் வெற்றிபெறும் மாணவர்கள் ஜப்பானுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படுவர் என, முதன்மை கல்வி அதிகாரி முருகானந்தம் தெரிவித்தார்.

நெல்லை,

தேசிய அறிவியல் கண்காட்சி போட்டியில் வெற்றிபெறும் மாணவர்கள் ஜப்பானுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படுவர் என, முதன்மை கல்வி அதிகாரி முருகானந்தம் தெரிவித்தார்.

அறிவியல் கண்காட்சி

நெல்லை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் புத்தாக்க அறிவியல் கண்காட்சி நெல்லை அறிவியல் மையத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகானந்தம் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார்.

ஜப்பான் செல்ல வாய்ப்பு

அவர் பேசுகையில்,‘ மத்திய அரசால் உருவாக்கப்பட்ட அறிவியல் ஆய்வு மனப்பான்மையை வளர்க்க உதவும் திட்டத்தை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் மாநிலத்தில் செயல்படுத்தி வருகிறது. இதன்படி கடந்த 2010-ம் ஆண்டு முதல் புத்தாக்க அறிவியல் ஆய்வு கண்காட்சியை அந்த மையம் செயல்படுத்துகிறது. இந்த கண்காட்சியில், மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில போட்டிக்கும், அதில் வெற்றி பெறுகிறவர்கள் தேசிய போட்டிக்கும், தேசிய போட்டியில் வெற்றி பெறுகிறவர்கள் ஜப்பானுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள்’ என்றார்.

47 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

இந்த கண்காட்சியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 47 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்களது கண்டுபிடிப்புகளை கண்காட்சியில் வைத்து இருந்தனர். ஏராளமானோர் கண்காட்சியில் பங்கேற்று ரசித்தனர். தங்களது படைப்புகள் குறித்து பார்வையாளர்களுக்கு, சம்மந்தப்பட்ட மாணவ, மாணவிகள் விளக்கம் அளித்தனர். இதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் ரதிபாய், ஜெயராஜ், சந்திரசேகர், மெட்ரிக். பள்ளி ஆய்வாளர் நடராஜன், மெரின்டயானா, பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story