மனைவியின் சகோதரியிடம் நகை, பணம் மோசடி செய்த தொழிலாளி மீது வழக்கு


மனைவியின் சகோதரியிடம் நகை, பணம் மோசடி செய்த தொழிலாளி மீது வழக்கு
x
தினத்தந்தி 2 Feb 2018 8:30 PM GMT (Updated: 2 Feb 2018 7:29 PM GMT)

சங்கரன்கோவிலில், மனைவியின் சகோதரியிடம் நகை, பணம் மோசடி செய்த தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவிலில், மனைவியின் சகோதரியிடம் நகை, பணம் மோசடி செய்த தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி

சங்கரன்கோவில் என்.ஜி.ஓ.காலனியை சேர்ந்த ஜேம்ஸ் மனைவி சிம்லா ராணி (வயது 43). ஜேம்ஸ் ரெயில்வேயில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்து விட்டார்.

சிம்லா ராணியின் தங்கையின் கணவர் சதீஷ்(41). கூலி தொழிலாளி. இவரும், குடும்பத்தினருடன் என்.ஜி.ஓ. காலனியிலேயே வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவசர தேவைக்கு பணம் தேவைப்படுவதாக சிம்லா ராணியிடம் சதீஷ் கூறினார். உடனடியாக தன்னிடம் பணம் இல்லை எனக்கூறிய அவர், தன்னுடைய 4½ பவுன் நகையை வங்கியில் அடமானமாக வைத்து பணம் பெற்றுக் கொள்ளுமாறு கொடுத்தார்.

நகை, பணம் மோசடி

அந்த நகையை வங்கியில் அடமானம் வைத்து சதீஷ் பணம் பெற்றார். சதீஷ் அந்த நகையை மீட்க நடவடிக்கை எடுக்காத நிலையில், ஏலத்திற்கு வரும் சூழல் ஏற்பட்டது. இதை அறிந்த சிம்லாராணி, சில நாட்களுக்கு முன்பு ரூ.55 ஆயிரத்தை சதீசிடம் கொடுத்து நகையை மீட்டு தருமாறும், அந்த தொகையை பின்னர் தருமாறும் கேட்டு கொண்டார்.

போலீசார் விசாரணை

அந்த பணத்தை வாங்கிய அவர், நகையை மீட்கவில்லை. இதுகுறித்து சிம்லாராணி கேட்டபோது, சதீஷ் நகை, பணத்தை மோசடி செய்ததுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில், சதீஷ் மீது சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story