ஆட்டோ நிறுத்தம் அமைக்க ரூ.5 ஆயிரம் வைப்புத்தொகை: மாநகராட்சியை கண்டித்து டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்


ஆட்டோ நிறுத்தம் அமைக்க ரூ.5 ஆயிரம் வைப்புத்தொகை: மாநகராட்சியை கண்டித்து டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Feb 2018 10:00 PM GMT (Updated: 2 Feb 2018 7:29 PM GMT)

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில், ஆட்டோ நிறுத்தம் அமைக்க ரூ.5 ஆயிரம் வைப்புத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் நகரில் 140 ஆட்டோ நிறுத்தங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக, அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே ஆட்டோ நிறுத்தங்கள் அமைக்க வேண்டும். ஆட்டோ நிறுத்தம் அமைக்க ரூ.5 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி மற்றும் போலீசார் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், அனுமதி பெறுவதற்கான விண்ணப்பங்களை மாநகராட்சி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், அனுமதி பெறாத ஆட்டோ நிறுத்தங்களுக்கு மாநகராட்சி மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் நேற்று திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், ஆட்டோ டிரைவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது அவர்கள் கூறியதாவது:-

திண்டுக்கல்லை மாநகராட்சியாக உயர்த்திய பின்பு குடிநீர், வீடு, சொத்து வரி உள்பட பல்வேறு வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், ஆட்டோவுக்கு இன்சூரன்ஸ், சாலை வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோ தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்தநிலையில், ஆட்டோ நிறுத்தம் அமைக்க வைப்புத்தொகையாக ரூ.5 ஆயிரம் மற்றும் ஒரு ஆட்டோவுக்கு ஆண்டுக்கு ரூ.500 வரி செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதனை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் ஆட்டோ தொழிற்சங்க கூட்டுக்குழு கூட்டத்தை கூட்டி அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினார். 

Next Story