மனைவி கொலையில் துப்பு துலங்காத நிலையில் தொழிலாளியும் தூக்கில் பிணமாக தொங்கியதால் பரபரப்பு


மனைவி கொலையில் துப்பு துலங்காத நிலையில் தொழிலாளியும் தூக்கில் பிணமாக தொங்கியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Feb 2018 10:30 PM GMT (Updated: 2 Feb 2018 7:30 PM GMT)

மனைவி கொலை நடந்து ஒரு மாதமாகியும் துப்பு துலங்காத நிலையில், தொழிலாளி தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். போலீஸ் விசாரணைக்கு அவர் செல்ல இருந்த நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அழகியபாண்டியபுரம்,

குமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் அருகே சி.எம்.எஸ். நகர் பகுதியை சேர்ந்தவர் இளையபெருமாள், ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. அவருடைய மனைவி லலிதா (வயது 35). இவர்களுக்கு அஜேஸ் (19), அஜித் (17) என இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அஜேஸ் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். 2-வது மகன் அஜித் பூதப்பாண்டி அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

கடந்த மாதம் 5-ந் தேதி இளையபெருமாள் அதிகாலை 5 மணி அளவில் வேலைக்கு சென்றார். இளைய மகன் அஜித் டியூசன் படிப்பதற்காக சென்றார். லலிதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அஜித் டியூசன் முடிந்து வீட்டுக்கு வந்த போது, லலிதா தேங்காய் துருவியால் அடித்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கீரிப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கொலை நடந்து பல நாட்கள் ஆகியும் கொலையாளி குறித்து துப்பு துலங்காமல் இருந்தது. இதையடுத்து லலிதா கொலை பற்றி போலீசார் ரகசியமாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக சில நாட்களுக்கு முன்பு லலிதாவின் கணவர் இளையபெருமாளை தக்கலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அத்துடன் 2-ந் தேதி (அதாவது நேற்று) மீண்டும் விசாரணைக்கு வரவேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர்.

மனைவி கொலை சம்பவத்துக்கு பின்பு இளையபெருமாள், தன்னுடைய 2 மகன்களுடன் எட்டாமடையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று காலையில் இளையபெருமாள் தனது வீட்டுக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு தடிக்காரன்கோணம் சி.எம்.எஸ். நகர் பகுதிக்கு வந்தார். அவர் வெகுநேரமாகியும் திரும்ப வராததால் அவருடைய உறவினர்கள் தேடினர்.

தடிக்காரன்கோணத்தில் உள்ள வீட்டில் இளையபெருமாளை தேடிச் சென்ற அவரது மகனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு தூக்கில் இளையபெருமாள் பிணமாக தொங்கினார். இதை பார்த்ததும் அவரது மகன் அலறினார். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

இதுகுறித்து கீரிப்பாறை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இளையபெருமாள் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணைக்கு நேற்று செல்ல இருந்த நேரத்தில் இளையபெருமாள் தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கியதால், அவர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதே நேரத்தில் லலிதா கொலை தொடர்பாக விசாரணை என்ற பெயரில் இளையபெருமாளுக்கு தொடர்ந்து போலீசார் தொல்லை கொடுத்ததால் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

மனைவி லலிதா கொலை நடந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்த அதே வீட்டில் இளையபெருமாள் நேற்று மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. லலிதாவை தேங்காய் துருவியால் அடித்து கொடூரமாக கொன்றவர்கள் குறித்து இன்னும் துப்பு துலங்காத நிலையில், தற்போது இளையபெருமாளின் சாவு மேலும் மர்ம முடிச்சுகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கீரிப்பாறை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story