மாற்றுத்திறனாளி பெண் கற்பழிப்பு வழக்கு: வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் நெல்லை மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு


மாற்றுத்திறனாளி பெண் கற்பழிப்பு வழக்கு: வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் நெல்லை மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு
x
தினத்தந்தி 2 Feb 2018 9:15 PM GMT (Updated: 2 Feb 2018 7:54 PM GMT)

தேவர்குளம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நெல்லை மகளிர் கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

நெல்லை, -

தேவர்குளம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நெல்லை மகளிர் கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

கற்பழிப்பு

நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள சூரங்குடி கூவாச்சிபட்டி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சூட்டுசாமி. இவருடைய மகன் முத்துபாண்டி (வயது 25), கூலித்தொழிலாளி. இவர், 1.10.2013 அன்று அதே பகுதியை சேர்ந்த 26 வயதான மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை வாயை பொத்தி குண்டுக்கட்டாக தனது வீட்டுக்கு தூக்கிச் சென்றார்.

அங்கு வைத்து அந்த பெண்ணை கற்பழித்தார். இந்த விவரத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். ஆனால் சில நாட்கள் கழித்து அந்த பெண் கர்ப்பம் அடைந்தது தெரியவந்தது. இதை அறிந்த பெண்ணின் தாய், முத்துபாண்டியை சந்தித்து தட்டி கேட்டார். அப்போது அவரையும் முத்துபாண்டி மிரட்டி உள்ளார்.

10 ஆண்டு ஜெயில்

இதுகுறித்து பெண்ணின் தாய் நெல்லை புறநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துபாண்டியை கைது செய்தனர். அவர்கள் 4 பிரிவுகளின் கீழ் முத்துபாண்டி மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

நீதிபதி குணசேகரன் வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு அளித்தார். 4 பிரிவு குற்றங்களுக்கும் ஒட்டுமொத்தமாக 17 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.4,500 அபராதமும் விதித்தார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் அதிகபட்சமாக கற்பழிப்பு குற்றத்துக்காக 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால், அந்த தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் பால்கனி ஆஜராகி வாதாடினார்.

Next Story