விருத்தாசலம் அருகே சிறப்பு கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணிப்பு


விருத்தாசலம் அருகே சிறப்பு கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணிப்பு
x
தினத்தந்தி 2 Feb 2018 9:45 PM GMT (Updated: 2 Feb 2018 8:07 PM GMT)

விருத்தாசலம் அருகே சிறப்பு கிராம சபை கூட்டத்தை பொது மக்கள் புறக்கணித்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு கூட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டனர்.

கம்மாபுரம்,

விருத்தாசலம் அருகே வி.சாத்தமங்கலம் கிராமத்தில் நேற்று சமுக தணிக்கை தொடர்பாக சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை நடத்துவதற்காக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஹனீப் மற்றும் களப்பணியாளர்கள் அருணா, ஜோஸ்பின் மேரி, ஊராட்சி செயலாளர் செங்குட்டுவன் உள்பட அதிகாரிகள் பலர் வந்தனர். அப்போது அங்கு வந்த கிராம மக்கள், எங்கள் ஊரில் கால்நடை மருத்துவமனை மற்றும் குடிநீர், மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இது வரை செய்து கொடுக்கப்படவில்லை.

இது குறித்து பல முறை புகார் அளித்த பின்பும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து நாங்கள் இந்த கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்கிறோம் என கூறி விட்டு அங்கிருந்து சென்றனர்.

அவர்களை அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஹனிப், உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி உறுதியளித்தனர். இதை பொது மக்கள் ஏற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட்டனர். இதை தொடர்ந்து அங்கு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் தனிநபர் கழிப்பறை கட்டுதல் மற்றும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதில் மாதவன், பாஸ்கர், ஹரிதாஸ்பாபு, கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story