சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், போலீசாருக்கு டி.ஜி.பி. உத்தரவு


சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், போலீசாருக்கு டி.ஜி.பி. உத்தரவு
x
தினத்தந்தி 2 Feb 2018 10:30 PM GMT (Updated: 2 Feb 2018 8:24 PM GMT)

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று போலீசாருக்கு டி.ஜி.பி.சுனில்குமார் கவுதம் உத்தரவிட்டார்.

அரியாங்குப்பம்,

புதுவை தெற்கு பகுதி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் - போலீசார் குறைகேட்பு கூட்டம் அரியாங்குப்பம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கிராம முக்கிய பிரமுகர்களிடம் குறைகளை கேட்டார்.

இதில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் அடிக்கடி ரோந்து வந்து செல்ல வேண்டும். கடைகளின் விளம்பர தட்டிகள் போக்குவரத்திற்கு இடையூறாக பல இடங்களில் உள்ளன. தேங்காய்திட்டு முதல் நைனார்மண்டபம் வரை சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்து போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் பேசுகையில், ரோந்து போலீசாரின் வாட்ஸ் அப் எண்ணை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். எந்த ஒரு பிரச்சினை என்றாலும் உடனடியாக அவர்களது வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடக்கும் திருட்டை தடுக்க அப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், போக்குவரத்திற்கு இடையூறாக ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள், விளம்பர தட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீம், இன்ஸ்பெக்டர்கள் ரங்கநாதன், கவுதம் கணேஷ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், ரோந்து போலீசார், கிராமங்களின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 

Next Story