மோடி வருகையின்போது நாளை நடைபெற இருந்த பெங்களூரு முழுஅடைப்புக்கு தடை கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


மோடி வருகையின்போது நாளை நடைபெற இருந்த பெங்களூரு முழுஅடைப்புக்கு தடை கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 2 Feb 2018 9:30 PM GMT (Updated: 2 Feb 2018 8:56 PM GMT)

மகதாயி நதிநீர் பிரச்சினையில் பிரதமர் தலையிட வலியுறுத்தி மோடி வருகையின்போது பெங்களூருவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு கர்நாடக ஐகோர்ட்டு நேற்று தடை விதித்தது.

பெங்களூரு,

மகதாயி நதிநீர் பிரச்சினையில் பிரதமர் தலையிட வலியுறுத்தி மோடி வருகையின்போது பெங்களூருவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு கர்நாடக ஐகோர்ட்டு நேற்று தடை விதித்தது.

மகதாயி நதி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகம், மராட்டியம், கோவா ஆகிய மாநிலங்கள் இடையே பிரச்சினை இருந்து வருகிறது.

பொதுநல வழக்கு

இது தொடர்பான வழக்குகள் மீது நடுவர் மன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சினையில் பிரதமர் மோடி தலையிட வலியுறுத்தி கடந்த 25-ந் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் பா.ஜனதா சார்பில் பெங்களூருவில் நாளை (ஞாயிற்றுக் கிழமை)நடைபெறும் எடியூரப்பாவின் “பரிவர்த்தனா” பிரசார பயண நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி கர்நாடகம் வருகிறார். பிரதமர் பெங்களூருவுக்கு வருகை தரும் நாளில்(நாளை) அவரது கவனத்தை ஈர்க்கும் வகையிலும் மகதாயி பிரச்சினையில் தலையிடாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் பெங்களூருவில் மட்டும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்து இருந்தார்.

தடை விதிக்கிறோம்

இதற்கிடையே கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்து இருந்த பெங்களூரு முழுஅடைப்பு போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி கர்நாடக ஐகோர்ட்டில் ‘சிரத்தா பேரன்ட்ஸ் அசோசியேசன்’ என்ற அமைப்பு சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி(பொறுப்பு) ரமேஷ் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. கடைசியாக இந்த வழக்கின் விசாரணை பிப்ரவரி 2-ந் தேதிக்கு(அதாவது நேற்று) ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று தலைமை நீதிபதி(பொறுப்பு) ரமேஷ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வக்கீல்களின் வாதம் நடைபெற்றது.

வக்கீல்களின் வாதங்களை தொடர்ந்து பெங்களூரு முழு அடைப்பு போராட்டத்துக்கு தடை விதித்து தலைமை நீதிபதி ரமேஷ் உத்தரவிட்டார். அவர் கூறுகையில், “முழு அடைப்பு நடத்த சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து ஏற்கனவே தீர்ப்பு கூறி இருக்கிறது. அதனால் முழு அடைப்பு நடத்துவது சட்டவிரோதமானது. 4-ந் தேதி(நாளை) அறிவிக்கப்பட்டுள்ள பெங்களூரு முழு அடைப்பு போராட்டத்தை அரசு அனுமதிக்கக்கூடாது. இதற்கு நாங்கள் தடை விதிக்கிறோம். ஒருவேளை அரசு ஆதரவு வழங்கினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதுகாப்பு நடவடிக்கையை...

முழு அடைப்பு போராட்டத்தினால் பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதனால் முழு அடைப்பை ஏற்க முடியாது. முழு அடைப்பு அறிவிக்கப்பட்ட நாளில்(அதாவது நாளை) பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். அமைதி வழியில் போராட்டம் நடத்த தடை இல்லை” என்றார்.

ஐகோர்ட்டின் இந்த உத்தரவு குறித்து பொதுநல வழக்கில் மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் முதித்குந்திலியா நிருபர்களிடம் கூறுகையில், “4-ந் தேதி(நாளை) பெங்களூருவில் நடைபெற இருந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு கர்நாடக ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது. முழு அடைப்பு என்பது சட்டவிரோதமானது. அரசியல் சாசனத்திற்கு எதிரானது. தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்“ என்றார்.

முழுஅடைப்பு இல்லை

இந்த நிலையில் முழு அடைப்பு போராட்டத்திற்கு, கர்நாடக ஐகோர்ட்டு தடை விதித்தது குறித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மகதாயி நதி பிரச்சினையில் பிரதமர் மோடி தலையிட வலியுறுத்தி 4-ந் தேதி(அதாவது நாளை) பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தோம். பெங்களூரு வரும் பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த போராட்டத்தை நாங்கள் நடத்த முடிவு செய்தோம்.

ஐகோர்ட்டு தடை

ஆனால் இதற்கு கர்நாடக ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. ஐகோர்ட்டு உத்தரவை மதித்து பெங்களூவில் நாளை முழு அடைப்பு இல்லை. அந்த போராட்டத்தை நாங்கள் வாபஸ் பெற்றுவிட்டோம். ஆனால் நாங்கள் நாளைய தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்போம். இந்த பிரச்சினையில் பா.ஜனதாவினர் அரசியல் நடத்துகிறார்கள். மகதாயி பிரச்சினையை தீர்ப்பதில் அவர்கள் அக்கறை காட்டவில்லை. எங்களின் போராட்டத்திற்கு பா.ஜனதாவினர் அரசியல் சாயம் பூசுவது சரியல்ல. இதை நான் கண்டிக்கிறேன்.

இவ்வாறு வாட்டாள் நாகராஜ் கூறினார்.

Next Story