மும்பை மாநகராட்சி பட்ஜெட் ரூ.27,258 கோடிக்கு தாக்கல் கடற்கரை சாலை பணி ஏப்ரல் மாதம் தொடங்கும் பொது கழிவறைகளில் கட்டணம் ஒழிப்பு


மும்பை மாநகராட்சி பட்ஜெட் ரூ.27,258 கோடிக்கு தாக்கல் கடற்கரை சாலை பணி ஏப்ரல் மாதம் தொடங்கும் பொது கழிவறைகளில் கட்டணம் ஒழிப்பு
x
தினத்தந்தி 2 Feb 2018 11:00 PM GMT (Updated: 2 Feb 2018 9:35 PM GMT)

ரூ.27,258 கோடியில் 2018-19-ம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

மும்பை,

ரூ.27,258 கோடியில் 2018-19-ம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், கடற்கரை சாலை ஏப்ரல் மாதம் தொடங்கும். மேலும், மாநகராட்சி பொது கழிவறைகளில் கட்டண வசூலிப்பு முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் தாக்கல்

நாட்டின் பணக்கார மாநகராட்சியான மும்பை மாநகராட்சியின் 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சி கூட்டத்தில் ரூ.27 ஆயிரத்து 258 கோடிக்கான பட்ஜெட்டை கமிஷனர் அஜாய் மேத்தா தாக்கல் செய்தார். பட்ஜெட் அறிக்கையை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் ரமேஷ் கோர்காவ்கர் பெற்றுக்கொண்டார்.

மாநகராட்சி பட்ஜெட்டில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கடற்கரை சாலை

மும்பையில் மெரின்லைன்ஸ் பிரின்சஸ் தெரு பகுதியில் இருந்து காந்திவிலிக்கு கடற்கரையையொட்டி சாலைபோட திட்டமிடப்பட்டு உள்ளது. 29.20 கி.மீ. தூரத்துக்கு அமைய உள்ள இந்த கடற்கரை சாலை ரூ.15 ஆயிரம் கோடி செலவில் 4 ஆண்டுகளுக்குள் போடப்பட உள்ளது. கடற்கரை சாலை திட்டம் மும்பை மாநகராட்சி நிதியில் இருந்து நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் மேற்கு புறநகர் பகுதியை சேர்ந்த மக்கள் எளிதில் தென்மும்பை பகுதிக்குள் வர முடியும். மேலும் நகர் புறப்பகுதியிலும், மேற்கு விரைவு சாலையிலும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். கடற்கரை சாலை திட்டம் நிறைவேறினால் அது மும்பைவாசிகளுக்கு வரமாக அமையும். கடற்கரை சாலை திட்டப்பணிகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் கடற்கரை சாலை திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. கடற்கரை சாலை திட்டத்தின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என மாநகராட்சி கருதுகிறது.

மேலும் பட்ஜெட்டில் கூறப்பட்டு உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

ஜவுளி அருங்காட்சியகம்

*புறநகர் மும்பையின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளை இணைக்கும் வகையில் கோரேகாவ்- முல்லுண்டு இணைப்பு சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 3 கட்டமாக நிறைவேற்றப்படும் இந்த திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

*நகரில் உள்ள மார்க்கெட்டுகளில் கரிம மாற்றிகள் (ஆர்கானிக் கன்வெர்ட்டர்கள்) வைக்கப்பட உள்ளன. இதற்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

*மும்பையில் ஜவுளி அருங்காட்சியம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

*நகரில் ஓடும் பெரிய கழிவுநீரோடையான மித்தி நதியை அழகுபடுத்தவும், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கவும் ரூ.15 கோடி ஒதுக்கீடு.

புதிய தீயணைப்பு நிலையங்கள்

*மும்பை மேம்பாட்டு திட்டம் 2014-34-க்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.2,665.37 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

*பைகுல்லாவில் உள்ள ராணிபார்க் விலங்கியல் பூங்காவில் இந்த ஆண்டு ரூ.50 கோடியே 25 லட்சம் செலவில் மேம்பாட்டு பணிகள் செய்யப்படும்.

*மும்பையில் புதிய தீயணைப்பு நிலையங்கள் மற்றும் மினி தீயணைப்பு நிலையங்கள் அமைக்கவும், நவீன தீயணைப்பு உபகரணங்கள் வாங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.180 கோடியே 62 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

*மும்பை மாநகராட்சியின் சயான் மருத்துவனை 1,800 படுக்கை வசதிகளுடன் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல கட்டமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான பணிகள் வருகிற ஜூலை மாதமும், நாயர் மருத்துவமனையில் ரூ.340 கோடி செலவு மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான பணிகள் இந்த ஆண்டு தொடங்கும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

*25 முக்கிய மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகளுக்கு ரூ.16 கோடி செலவில் 230 வெண்டிலேட்டர் படுக்கைகள் வாங்கப்படும்.

எரியூட்டிகள்

*மும்பையில் தற்போது 10 இரவு நேர காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. வருகிற மார்ச் மாதத்திற்குள் 11 புதிய இரவு நேர காப்பகங்கள் தொடங்க உள்ளன. இந்தநிலையில், புதிதாக 25 இரவு நேர காப்பகங்களை தொடங்கும் திட்டத்திற்கு ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

*மும்பையில் மழை நேரத்தில் வெள்ளம் தேங்கும் 55 இடங்கள் ரூ.53 கோடியே 71 லட்சம் செலவில் சரி செய்யப்பட உள்ளது.

*மாநகராட்சி அதிகாரிகளுக்கு என்று உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு.

*திடக்கழிவு மேலாண்மை திட்டங்களுக்கு ரூ.510.33 கோடி ஒதுக்கீடு.

*மும்பையில் அதிகளவில் தெருநாய்கள் உள்ளன. ஏராளமானவர்கள் நாய்கள், பூனைகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் இறக்கும் போது, அவற்றின் உடல்களை எரிக்க மும்பையில் முதல் முறையாக மலாடு, மகாலட்சுமி, தேவ்னார் ஆகிய இடங்களில் எரியூட்டிகள் அமைக்கப்படுகின்றன. இதற்கான பணிகள் இந்த நிதி ஆண்டியிலேயே தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

பொது கழிவறை கட்டண முறை ஒழிப்பு

*நகரில் ரூ.434 கோடி செலவில் கான்கிரீட் சாலைகள் மற்றும் ரூ.590 கோடி செலவில் ஆஸ்பால்ட் சாலைகள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சியின் சாலை துறைக்கு ரூ.2,058.92 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

*மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பிறப்பு குறைபாடுகள் மற்றும் வளர்ச்சி பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ‘ஆரம்ப தலையீடு மையம்’(யளி இன்டர்வென்சன் சென்டர்) அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

*மும்பையில் பொது கழிவறைகளில் கட்டணம் வசூலிக்கும் முறையை அடியோடு ஒழிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இனி கழிவறைகளை இலவசமாக பயன்படுத்தி கொள்ள வழிவகை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது.

Next Story