காஞ்சீபுரம் அருகே விவசாயி வெட்டிக்கொலை


காஞ்சீபுரம் அருகே விவசாயி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 2 Feb 2018 10:08 PM GMT (Updated: 2 Feb 2018 10:08 PM GMT)

காஞ்சீபுரம் அருகே விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாமல்லன் நகரை சேர்ந்தவர் இளங்கோ (வயது 50). விவசாயி. இவரது நிலம் காஞ்சீபுரம் அடுத்த கூரம் கேட் பகுதியில் உள்ளது. இவரது தாய்மாமன் சந்தியப்பன் (75). இவர் தமிழக நெடுஞ்சாலைத்துறை ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார். இந்த நிலையில் இவருக்கும், இளங்கோவுக்கும் சொத்து தகராறு காரணமாக கடந்த 2010-ம் ஆண்டு முதல் காஞ்சீபுரம் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

இந்த நிலையில் இளங்கோ தனது மோட்டார் சைக்கிளில் நிலத்தை சுற்றிபார்க்க கூரம் கேட்டிற்கு சென்றார். அப்போது வழியில் ஒரு கும்பல் இளங்கோவை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் இளங்கோ அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அலறினார்கள். அதற்குள் இளங்கோவை கொலை செய்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி நேரில் சென்று விசாரணை நடத்தினார். இது குறித்து பாலுசெட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.பிரபாகர், தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட விவசாயி இளங்கோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில் சொத்துக்காக இளங்கோவை அவரது தாய்மாமன் சந்தியப்பன் கூலிப்படையை ஏவிவிட்டு கொலை செய்தது தெரியவந்தது. இறந்த இளங்கோவிற்கு லட்சுமி (42) என்ற மனைவி உள்ளார். இந்த கொலை குறித்து சந்தியப்பனின் மகன்கள் பாலாஜி, கணேசன் மற்றும் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story