ஊத்தங்கரையில் மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை


ஊத்தங்கரையில் மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 2 Feb 2018 11:02 PM GMT (Updated: 2 Feb 2018 11:02 PM GMT)

ஊத்தங்கரையில் மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா கூறினார்.

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு, வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் அரசுத்துறைகள் இணைந்து நடத்தும் நவீன வடிவிலான சட்ட சேவை முகாம் நடந்தது.

முகாமுக்கு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான பூர்ணிமா தலைமை தாங்கினார். கலெக்டர் கதிரவன் முன்னிலை வகித்தார். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நில பிரச்சினை, நில அபகரிப்பு, குடும்ப பிரச்சினை, சொத்து பிரச்சினை, பட்டா மற்றும் சிட்டா வழங்குதல், முதியோர் உதவித்தொகை போன்றவை குறித்து மனுக்களை கொடுத்தனர். இதில் நீதிபதி பூர்ணிமா பேசும் போது கூறியதாவது:-

ஊத்தங்கரை பகுதியில் இளம் வயதில் திருமணம் நடத்தப்படுகிறது. பள்ளி பருவத்திலேயே குழந்தைகள் காணாமல் போவதும், உயிரை மாய்த்துக்கொள்வது மற்றும் தற்கொலை செய்து கொள்வது போன்ற நிலை சமீபகாலமாக நடந்து வருகிறது. இந்த நிலையை கருத்தில் கொண்டு பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதுபோன்ற நவீன வடிவிலான சட்ட சேவை முகாம் பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் குறித்து நடத்தப்படுகிறது.

பருவ வயது வராத குழந்தைகளுக்கு திருமண ஏற்பாடு பெற்றோர்கள் செய்யக்கூடாது. அந்த குழந்தைகள் உடல் ரீதியாக தகுதியாக மாட்டார்கள். தொலைக் காட்சி, சினிமா பார்ப்பது மூலமாக பெண் குழந்தைகள் தவறான நிலைக்கு உட்பட்டு வருகிறார்கள். பள்ளி ஆசிரியர்கள் கல்வியை மட்டும் போதிப்பதோடு மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண் கல்விக்கு அரசு ஊக்குவித்து வருகிறது. பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் சாதனை புரிந்து வருகிறார்கள்.

எதிர் காலத்தில் பெண் குழந்தைகள் நல்ல கல்வி கற்று மறுமலர்ச்சி ஏற்படுத்த வேண்டும். உயிரை மாய்த்துக் கொள்வது, தற்கொலை செய்து கொள்வது என இதற்கெல்லாம் ஆளாக கூடாது. பெண் குழந்தைகள் படிக்க சென்றால் தலைமுறையே நன்றாக இருக்கும். எனவே பெண்குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள். பெற்றோர்கள் குழந்தைகளை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

ஊத்தங்கரை பகுதியில் மகளிர் போலீஸ் நிலையம், மகளிர் கலைக்கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து கல்வி படிக்கவும், இளம் வயது திருமணம் தடுக்க குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நவீன டிஜிட்டல் வாகனம் மூலம் இலவச சட்ட விழிப்புணர்வு குறித்து குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. தொடர்ந்து 500 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில் பள்ளி மாணவ, மாணவிகளின் சிலம்பாட்டம், கரகாட்டம், தப்பாட்டம், கோலாட்டம், வாள் வீச்சு, யோகா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன. முன்னதாக ஊத்தங்கரை சார்பு நீதிபதி சுகந்தி வரவேற்று பேசினார். இதில் கூடுதல் மாவட்ட நீதிபதியும் மக்கள் நீதிமன்ற தலைவருமான அறிவொளி, கூடுதல் மாவட்ட நீதிபதிகள் அன்புசெல்வி, அசோகன், உள்ளிட்டோர் பேசினார்கள்.

இதில் வக்கீல்கள் சங்க தலைவர்கள் குணசேகரன், பீமராஜ், செயலாளர்கள் மூர்த்தி, ரகு, குற்றவியல் நீதிதுறை நடுவர் ராஜேஷ் ராஜீ உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சார்பு நீதிபதி தஸ்னீம் நன்றி கூறினார்.

Next Story