பிளஸ்-2 மாணவன், மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி


பிளஸ்-2 மாணவன், மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி
x

வாணியம்பாடி அருகே ஒரே பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவரும், மாணவியும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அவர்கள் மயங்கிய நிலையில் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆம்பூர்,

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த கோடியூரை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவரது மகன் பிரபாகரன் (வயது 17), வள்ளிப்பட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறான். நேற்று காலை வழக்கம் போல பள்ளிக்கு வந்த மாணவன் பிரபாகரன் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்களும், ஆசிரியர்களும் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்தபோது, மாணவன் விஷம் குடித்தது தெரியவந்தது. இதனையடுத்து அங்கிருந்து மாணவன் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

நேற்று முன்தினம் மாலை அதே பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் பாப்பானேரியை சேர்ந்த முருகன் மகள் திலகவதி (17) என்பவர் பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒரே பள்ளியில் படிக்கும் மாணவனும், மாணவியும் எதற்காக விஷம் குடித்தனர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story