தண்ணீர் தொட்டியில் வாலிபர் பிணமாக கிடந்த வழக்கில் திடீர் திருப்பம்: என்.எல்.சி.யில் திருட சென்றபோது மின்சாரம் தாக்கி பலி, 2 பேர் கைது


தண்ணீர் தொட்டியில் வாலிபர் பிணமாக கிடந்த வழக்கில் திடீர் திருப்பம்: என்.எல்.சி.யில் திருட சென்றபோது மின்சாரம் தாக்கி பலி, 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 Feb 2018 3:00 AM GMT (Updated: 8 Feb 2018 3:00 AM GMT)

தண்ணீர் தொட்டியில் வாலிபர் பிணம் கிடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து என்.எல்.சி.யில் திருட சென்ற போது மின்சாரம் தாக்கி பலியானது தெரியவந்துள்ளது.

நெய்வேலி,

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள மேலக்குப்பத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மகன் சுபாஷ் சந்திரகுமார்(வயது 21). இவர் கடந்த மாதம் 25-ந்தேதி தனது வீட்டில் உள்ளவர்களிடம் வெளியே சென்று விட்டு வருவதாக கூறி சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி பார்த்தனர். இருப்பினும் அவர் எங்கே சென்றார்?, என்ன ஆனார்? என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி என்.எல்.சி. 2-வது அனல் மின் நிலையத்தில் உள்ள ஒரு தண்ணீர் தொட்டியின் உள்ளே உடல் அழுகிய நிலையில் சுபாஷ் சந்திரகுமார் பிணமாக கிடந்தார். அவரது உடலை தெர்மல் போலீசார் கைப்பற்றி விசாரித்தனர்.

சுபாஷ் சந்திரகுமார் பிணமாக கிடந்த இடம் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் பாதுகாப்பு பகுதியில் அமைந்து இருக்கிறது. இதனால் இங்கு இவர் எப்படி வந்தார்? இவரை யாராவது கொலை செய்து, கொண்டு வந்து போட்டார்களா? என்று பல்வேறு கோணங்களில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது, சுபாஷ் சந்திரகுமார் உள்பட 4 பேர் என்.எல்.சி. 2-வது அனல் மின்நிலைய பகுதியில் சுவர் ஏறி குதித்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவருடன் வந்தவர்கள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்தனர். அதில், அவர்கள் மேலக்குப்பத்தை சேர்ந்த இளங்கோவன், கருணாநிதி மகன் அப்பு(21), அன்பழகன் மகன் மணிகண்டன்(24) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் சுபாஷ் சந்திரகுமாரின் நெருங்கிய கூட்டாளிகள் என்றும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் பிடித்தால் சுபாஷ் சந்திரகுமார் மரணம் குறித்து தெரியவரும் என்று கருதிய போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று, 30-வது வட்டத்தில் பாலக்கரையில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் அப்பு, மணிகண்டன் ஆகியோர் நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, 2 பேரையும் மடக்கி பிடித்தனர்.

தொடர்ந்து, அவர்களிடம் சுபாஷ் சந்திரகுமார் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்தனர். அதில், கடந்த மாதம் 25-ந்தேதி இரவு 2-ம் அனல் மின்நிலையத்தில் உள்ள ஒரு மின்மாற்றியில் இருந்த தாமிர பிளேட்டுகளை திருடுவதற்காக நாங்கள் 4 பேரும் சுவர் ஏறி குதித்து சென்றோம்.

அங்கு மின்மாற்றியின் மீது சுபாஷ் சந்திரகுமார் ஏறினார். அதில் இருந்த தாமிர பிளேட்டுகளை அவர் அகற்றும் போது, மிகப்பெரிய அளவில் தீப்பொறி ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த நாங்கள், சுபாஷ் சந்திரகுமாரை கீழே இறங்கி வருமாறு கூறினோம்.

இதைதொடர்ந்து அவரும் இறங்கினார். அப்போது தவறுதலாக அதில் இருந்த மின்சார ஒயர் மீது சுபாஸ் சந்திரகுமாரின் கைப்பட்டதாக தெரிகிறது. இதில் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். உடன் நாங்கள் அருகே சென்று பார்த்த போது, அவர் இறந்து இருப்பது தெரியவந்தது. இதனால் நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போனோம்.

மேலும் உடலை அங்கிருந்து எடுத்து சென்றால் போலீசில் சிக்கி கொள்வோம் என்று எண்ணினோம். தொடர்ந்து சுபாஷ் சந்திரகுமாரின் உடலை அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தூக்கி வீசிவிட்டு 3 பேரும் தப்பி சென்றுவிட்டோம். இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் சிக்கி கொண்டோம் என்று தெரிவித்தனர். தொடர்ந்து அப்பு, மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் இளங்கோவனை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Next Story