20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்


20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
x
தினத்தந்தி 8 Feb 2018 3:01 AM GMT (Updated: 8 Feb 2018 3:01 AM GMT)

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் தற்செயல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன.

திருவாரூர்,

வருவாய்த்துறை ஊழியர் களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். அலுவலக உதவியாளர்கள் மற்றும் பதிவறை எழுத்தர்களுக்கு தனி ஊதியம் வழங்க வேண்டும். வருவாய்த்துறையில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 21 மாத கால ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் 2 நாட்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று திருவாரூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தினை நேற்று தொடங்கினர். இந்த போராட்டத்தினால் திருவாரூர் தாலுகா அலுவலகத்தில் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதே போல் மாவட்ட கலெக்டர் அலுவலகம், 8 தாசில்தார் அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலக உதவியாளர்் முதல் தாசில்தார்கள் வரை போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் 160 பெண்கள் உள்பட 400 பேர்் ஈடுபட்டனர். இதனால் வருவாய்த்துறை பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் சோமசுந்தரம் கூறுகையில், வருவாய்த்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேம்படுத்தப்பட்ட ஊதியம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 48 மணி நேரம் தற்செயல் விடுப்பு போராட்டத்தினை தொடங்கியுள்ளோம். எனவே தமிழக அரசு உடனடியாக வருவாய்த்துறை ஊழியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்டமாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடும் நிலை ஏற்படும் என கூறினார்.

இதே போல வலங்கைமான் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று வருவாய்த்துறை அலுவலர்கள், முதுநிலை ஆய்வாளர்கள், தலைமையிடத்து துணை தாசில்தார், மண்டல துணை தாசில்தார், சரக வருவாய் ஆய்வாளர்கள் உள்பட 19 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் பரஞ்சோதி மற்றும் சர்வேயர்கள் மட்டுமே பணிக்கு வந்த நிலையில் வேறு யாரும் வராததால் அலுவலகம் வெறிச்சோடி காணப் பட்டது.

மன்னார்குடி வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.அலுவலக பணிகளும் பாதிக்கப்பட்டன. இதனால் தாசில்தார் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

Next Story