மின்மயமாக்கும் பணி நிறைவு; ஈரோடு-திருச்சி கோட்டை வழித்தடத்தில் ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு


மின்மயமாக்கும் பணி நிறைவு; ஈரோடு-திருச்சி கோட்டை வழித்தடத்தில் ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 8 Feb 2018 3:01 AM GMT (Updated: 8 Feb 2018 3:01 AM GMT)

மின்மயமாக்கும் பணி நிறைவு பெற்றதால் ஈரோடு-திருச்சி கோட்டை இடையே உள்ள வழித்தடத்தில் ரெயில்வே அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

ஈரோடு,

ஈரோட்டில் இருந்து திருச்சி கோட்டைவரை ரெயில் நிலைய வழித்தடம் புதிதாக மின்மயமாக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் முழுமையாக நிறைவடைந்தது. இந்த வழித்தடத்தில் தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையாளர் கே.ஏ.மனோகரன் நேற்று ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வு பணிகள் ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கியது. இதற்காக 5 பெட்டிகளுடன் கூடிய சிறப்பு ரெயில் ஒன்று ஈரோடு ரெயில் நிலையத்தின் 3-வது நடைமேடையில் தயாராக நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த ரெயிலின் பின்பகுதியில் அதிகாரிகள் தண்டவாளத்தை பார்வையிடும் வகையில் கண்ணாடி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த ரெயிலில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையாளர் மனோகரன் ஏறி அமர்ந்தார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

ஈரோட்டில் இருந்து திருச்சி கோட்டை வரை ரெயில் வழித்தடத்தில் சுமார் 140 கிலோ மீட்டர் தூரம் மின்மயமாக்குதல் பணி முடிவு பெற்று உள்ளது. அந்த வழித்தடத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன. அதில் ஏதாவது பிரச்சினைகள் உள்ளதா? முறையாக மின்பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளனவா? என்று பார்வையிடப்படும். இதன் சோதனை ஓட்டம் நாளை (அதாவது இன்று) நடக்கிறது. அதில் அதிகபட்சம் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் மின்சார ரெயில் இயக்கி சோதனை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகள் சென்ற சிறப்பு ரெயில் காலை 9.45 மணிஅளவில் ஈரோட்டில் இருந்து புறப்பட்டது. அவர்கள் ரெயிலில் அமர்ந்தபடி தண்டவாளங்களை பார்வையிட்டனர். இந்த சிறப்பு ரெயில் சாவடிபாளையம், பாசூர், ஊஞ்சலூர், கொடுமுடி, புகளூர், மூர்த்திபாளையம், கரூர், வீரராக்கியம், மாயனூர், மகாதனபுரம், லாலாபேட்டை, குளித்தலை ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக சென்று திருச்சி கோட்டை ரெயில் நிலையத்திற்கு மாலையில் சென்றடைந்தது.

இந்த ஆய்வின்போது சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா, தெற்கு ரெயில்வே முதன்மை மின்பொறியாளர் எஸ்.ராமசுப்பு, தெற்கு ரெயில்வே தலைமை மின்மயமாக்கல் திட்ட பொறியாளர் நாகேந்திர பிரசாத், சேலம் கோட்ட முதுநிலை மின்பொறியாளர் எம்.பிரபாகரன், கரூர் துணை தலைமை மின்பொறியாளர் டி.சி.ஜான்சன் உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

இதேபோல் இன்று (வியாழக்கிழமை) காலை 9.50 மணிக்கு திருச்சி கோட்டையில் இருந்து புறப்படும் ஆணையாளர் மனோகரன் சிறப்பு ரெயில் மூலமாக ஈரோட்டிற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார். மேலும், ஈரோடு-திருச்சி கோட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையேயான அதிவேக மின்சார ரெயில் சோதனை ஓட்டம் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது. 

Next Story