இலங்கை கடற்படையிடம் 3¼ கிலோ தங்கத்துடன் 2 பேர் பிடிபட்டனர்


இலங்கை கடற்படையிடம் 3¼ கிலோ தங்கத்துடன் 2 பேர் பிடிபட்டனர்
x
தினத்தந்தி 8 Feb 2018 3:15 AM GMT (Updated: 8 Feb 2018 3:02 AM GMT)

இலங்கை கடற்படையிடம் நடுக்கடலில் 3¼ கிலோ தங்கத்துடன் 2 பேர் பிடிபட்டனர்.

ராமேசுவரம்,

இலங்கை காங்கேசன் துறைமுக பகுதியில் அந்நாட்டு கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடுக்கடலில் வேகமாக சென்ற பிளாஸ்டிக் படகை கண்ட இலங்கை கடற்படையினர் விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர். அந்த படகில் இலங்கையை சேர்ந்த 2 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரித்ததில் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார்களாம்.

இதனால் சந்தேகம் அடைந்த இலங்கை கடற்படையினர் படகை சோதனையிட்டபோது அதில் 3¼ கிலோ தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து தங்கத்தையும், படகையும் பறிமுதல் செய்த கடற்படையினர் 2 பேரையும் காங்கேசம் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று துருவி துருவி விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் அவர்கள் தங்கக்கட்டிகளை ராமேசுவரம் வழியாக தமிழகத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த ராமேசுவரத்தில் உள்ள புலனாய்வு துறையினர் கடத்தல் சம்பவத்தில் தமிழகத்தில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story