மக்கள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம் - ரங்கசாமி உறுதி


மக்கள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம் - ரங்கசாமி உறுதி
x
தினத்தந்தி 8 Feb 2018 5:21 AM GMT (Updated: 8 Feb 2018 5:21 AM GMT)

புதுவையில் மக்கள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று என்.ஆர்.காங்கிரஸ் நிறுவன தலைவர் ரங்கசாமி கூறினார்.

புதுச்சேரி,

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆண்டுவிழா 100 அடி ரோட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவில் முன்னாள் முதல்-அமைச்சரும், கட்சியின் நிறுவன தலைவருமான ரங்கசாமி கலந்துகொண்டு கட்சிக்கொடியேற்றினார்.

தொடர்ந்து தலைவர்களின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் தொண்டர்களிடம் வாழ்த்துகளை பெற்றார்.

அப்போது அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-

புதுவையில் கடந்த காலங்களில் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம். அந்த ஆட்சியை தொடர்ந்து மக்கள் விரும்புகின்றனர். இப்போது கட்சியின் 8-வது ஆண்டுவிழாவினை கொண்டாடுகிறோம்.

மக்களுக்காக தொடர்ந்து பாடுபடும் இயக்கம் என்.ஆர்.காங்கிரஸ். மாநில வளர்ச்சியை நோக்கியே எங்களது பயணம் இருக்கும். எங்கள் கட்சியின் அடிப்படை கொள்கையே மாநில அந்தஸ்து பெறுவதுதான். அதற்காக தொடர்ந்து உழைப்போம்.

நாங்கள் தொடர்ந்து மக்களுக்காக பாடுபட ஒத்துழைப்பு அளிக்கும் அனைவருக்கும் நன்றி. மக்கள் ஆதரவுடன் புதுவையில் மீண்டும் ஆட்சி அமைப்போம். கூட்டணிகள் குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம். நாங்கள் இப்போது யாருடன் உள்ளோம் என்பது உங்களுக்கு தெரியும். எந்த நேரமும் புதுவை மக்களுக்காக பாடு படுவோம்.

கட்சியின் வளர்ச்சிக்காக தொகுதிவாரியாக உறுப்பினர் சேர்க்கை நடத்த உள்ளோம். பிரதமர் நரேந்திரமோடி ஆரோவில்லுக்கு வரும்போது அவரை கண்டிப்பாக சந்தித்து பேசுவேன். எதிர்காலத்தில் புதுவை மக்கள் விரும்பும் ஆட்சி அமைக்கும் வகையில் எங்கள் செயல்பாடு இருக்கும்.

இவ்வாறு ரங்கசாமி கூறினார்.

Next Story