காதல் மனைவியை சேர்த்து வைக்கக்கோரி ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயற்சி


காதல் மனைவியை சேர்த்து வைக்கக்கோரி ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 19 Feb 2018 10:30 PM GMT (Updated: 19 Feb 2018 7:19 PM GMT)

காதல் மனைவியை சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி,

சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டையை சேர்ந்த ராஜூ மகன் மணிகண்டன் (வயது 27). ஆட்டோ டிரைவர். இவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அலுவலகம் முன்பு அவர் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் ஒருவர் ஓடிச் சென்று அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினார். உடனே அக்கம் பக்கத்தில் நின்றவர்களும் ஓடி வந்து அவரை தடுத்தனர். தகவல் அறிந்ததும் தேனி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறுகையில், ‘நான் மார்க்கையன்கோட்டையை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். இந்நிலையில் எனது காதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். மனைவியின் பெற்றோர்தான் ஏமாற்றி அவரை அழைத்துச் சென்றுள்ளனர். எனது மனைவியை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்’ என்றார்.

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, இந்த பிரச்சினை தொடர்பாக மணிகண்டன் ஏற்கனவே போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்ததும், அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது, அவருடைய மனைவி தனது பெற்றோருடன் செல்ல விரும்புவதாக எழுதிக் கொடுத்துச் சென்று விட்டதும் தெரியவந்தது. இதையடுத்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக மணிகண்டன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story