சின்னசேலம் அருகே மாணவிக்கு ரோஜா பூ கொடுத்து காதலை தெரிவித்த ஆசிரியர் கைது


சின்னசேலம் அருகே மாணவிக்கு ரோஜா பூ கொடுத்து காதலை தெரிவித்த ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 19 Feb 2018 11:15 PM GMT (Updated: 19 Feb 2018 7:25 PM GMT)

சின்னசேலம் அருகே மாணவிக்கு ரோஜா பூ கொடுத்து காதலை தெரிவித்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். மேலும் உடந்தையாக இருந்த ஆசிரியர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

சின்னசேலம்,

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மேல்நாரியப்பனூரில் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி காதலர் தினத்தன்று ஆசிரியர் நிர்மல்(வயது48) என்பவர், இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் அதே பகுதியை சேர்ந்த 13 வயதுடைய மாணவியிடம், நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூறி ரோஜா பூ ஒன்றை கொடுத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அழுது கொண்டே வகுப்பறைக்கு சென்றார். இதுபற்றி நிர்மல், சக ஆசிரியர்களான லாரன்ஸ், ஜான் பிரான்சிஸ்(40) ஆகியோரிடம் தெரிவித்தார். இதையடுத்து லாரன்ஸ், ஜான்பிரான்சிஸ் ஆகியோர் அந்த மாணவியை அழைத்து, ஆசிரியர் நிர்மல் ரோஜா பூ கொடுத்து காதலை தெரிவித்தது பற்றி யாரிடமும் கூறினால், இந்த பள்ளியில் தொடர்ந்து படிக்க முடியாது என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மாணவி இதுபற்றி யாரிடமும் தெரிவிக்காமல் அழுது கொண்டே இருந்தார். இந்த நிலையில் வீட்டில் அழுது கொண்டே இருந்த மாணவியிடம் அவரது பெற்றோர் விசாரித்தனர். அப்போது ஆசிரியர் நிர்மல் தன்னிடம் ரோஜா பூ கொடுத்து தன்னை காதலிப்பதாக தெரிவித்தார் என்றும், இதை வெளியில் யாரிடமாவது கூறினால் பள்ளியில் படிக்க முடியாது என்று ஆசிரியர்கள் லாரன்ஸ், ஜான்பிரான்சிஸ் ஆகியோர் மிரட்டியதாகவும் கூறினார்.

இதை கேட்டு ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்நிலையில் இதுபற்றி அறிந்த மேல்நாரியப்பனூர் பகுதி பொதுமக்கள் பள்ளிக்கூடத்துக்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள், மாணவியிடம் ரோஜா பூ கொடுத்த ஆசிரியர் நிர்மலையும், அதற்கு உடந்தையாக இருந்த சக ஆசிரியர்களான லாரன்ஸ், ஜான்பிரான்சிஸ் ஆகியோரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறினர். அதற்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையே மாணவிக்கு ரோஜா பூ கொடுத்து காதலிப்பதாக கூறிய ஆசிரியர் நிர்மல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த லாரன்ஸ், ஜான்பிரான்சிஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story