பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்


பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
x
தினத்தந்தி 19 Feb 2018 9:45 PM GMT (Updated: 19 Feb 2018 8:04 PM GMT)

பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி தாலுகா அலங்காநல்லூர் அருகே உள்ளது கள்ளிவேலிப்பட்டி. இந்த ஊராட்சிக்குட்பட்ட நடுப்பட்டி கிராமத்தில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான கிணறு கிராமத்தில் உள் ளது. இந்த கிணற்றுக்கு செல்லும் பொதுப்பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்ததால், பாதையை பயன்படுத்த முடியாதபடி கிராம மக்கள் சிரமபட்டு வந்தனராம்.

மேலும் விழாக்காலங்களின் போது கோவிலுக்கு வருபவர்கள் கிணற்றுக்கு செல்ல வெகுதூரம் சுற்றி செல்ல வேண்டியதாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆக்கிமிப்பை அகற்ற கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கிராம மக்கள் பலமுறை தெரிவித்தும், புகாராக மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்தநிலையில் நேற்று திடீரென கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பொதுப்பாதையை மீட்டு தருமாறு கூறி தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த வாடிப்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தாசில்தார் பார்த்திபன், பொதுப்பாதை ஆக்கிரமிப்பை நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதைத்தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர். 

Next Story