தண்ணீர் குறைந்து ஓடையான காவிரி: ஈரோட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்


தண்ணீர் குறைந்து ஓடையான காவிரி: ஈரோட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 19 Feb 2018 9:45 PM GMT (Updated: 19 Feb 2018 8:50 PM GMT)

தண்ணீர் குறைந்து ஓடையான காவிரியால் ஈரோட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாநகரின் குடிதண்ணீர் ஆதாயமாக காவிரி ஆறு உள்ளது. கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் நீரேற்றம் செய்யப்பட்டு வீடுகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சராசரியாக 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் ஈரோடு மாநகராட்சி பகுதி குடிதண்ணீர் பிரச்சினை இல்லாத பகுதியாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகள் கடுமையான வறட்சி காலத்திலும் ஈரோடு மாநகராட்சியில் குடிதண்ணீர் பிரச்சினை பெரிய அளவில் வெடிக்காமல் இருந்தது. ஆனால் தற்போது காவிரி ஆற்றை பார்த்தால் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.

இதை உறுதி செய்யும் வகையில் கடந்த சில நாட்களாகவே காவிரியில் இருந்து நீரேற்றம் செய்யப்படும் தண்ணீர் கடுமையான துர்நாற்றத்துடன் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். மாநகராட்சி அதிகாரிகளும் முடிந்தவரையில் பொதுமக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனவேதான், கிடைக்கும் தண்ணீரை சிக்கனமாகவும், காய்ச்சி வடிகட்டியும் பயன்படுத்தும்படி மாநகராட்சி ஆணையாளர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

குளிர்காலம் முடிந்து இப்போதுதான் கோடைகாலம் தொடங்கி இருக்கிறது. இன்னும் மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் வெயிலில் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கும். இந்த ஆண்டு கோடையின் தொடக்கமே சூரியன் சுட்டெரிக்க தொடங்கி இருக்கிறது. நேற்று ஈரோட்டில் அதிக பட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசாக இருந்தது. பாரன்கீட் அளவில் இது 95 டிகிரியாகும். இன்னும் சில நாட்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரியை தாண்டும் என்று வானிலை மானிகள் தெரிவிக்கின்றன. ஆக, இந்த ஆண்டு கோடை வெப்பம் வாட்டி எடுக்க தயாராகி விட்ட நிலையில் அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

நமது ஈரோடு மாவட்டத்தின் தண்ணீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையில் நேற்றைய நிலவரப்படி நீர் மட்டம் 49.87 அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 459 கன அடியாக இருந்தது. ஆற்றுக்கு வினாடிக்கு 150 கன அடியும், வாய்க்காலுக்கு வினாடிக்கு 5 கன அடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. கடந்த ஆண்டு இதே நாளில் பவானிசாகர் அணையில் நீர்மட்டம் 41.84 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 14 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. கடந்த ஆண்டினை ஒப்பிடும்போது இந்த ஆண்டு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சற்று அதிகமாக இருந்தாலும் இது போதியதாக இருக்காது.

இதுபோல் காவிரி ஆற்றுக்கு தண்ணீர் தரும் மேட்டூர் அணையின் நேற்றைய நீர்மட்டம் 42.29 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 49 கன அடி தண்ணீர் மட்டுமே வரத்து உள்ளது. ஆனால் வினாடிகக்கு 500 கன அடி தண்ணீர் ஆற்றுக்கு திறக்கப்பட்டது. இந்த நிலை நீடித்தால் மேட்டூர் அணை மிக விரைவில் வறண்டுவிடும் அபாயம் உள்ளது. இது ஈரோட்டுக்கு தண்ணீர் வினியோகம் செய்வதிலும் சிக்கல் ஏற்படும். இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “தற்போதைய நிலவரப்படி இந்த மாதம் இறுதிவரை குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், அடுத்த மாதத்தில் இருந்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. வெண்டிபாளையம் கட்டளை கதவணையில் தண்ணீர் தேக்கி இருப்பதுதான் தற்போது தண்ணீர் துர்நாற்றமாக வருவதற்கு காரணம். மின் உற்பத்தி இல்லாததால் தண்ணீரை தேக்காமல் திறந்து விடலாம். இதன் மூலம் தண்ணீர் துர்நாற்றம் வீசுவதை தடுக்கலாம். இதற்கு உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். 

Next Story