நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 நாய்கள் தலைசிதறி சாவு கார் சேதம்


நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 நாய்கள் தலைசிதறி சாவு கார் சேதம்
x
தினத்தந்தி 19 Feb 2018 11:00 PM GMT (Updated: 19 Feb 2018 9:10 PM GMT)

ஆம்பூர் அருகே அடுத்தடுத்து நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 நாய்கள் தலைசிதறி இறந்தது. ஒரு காரும் சேதமடைந்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

ஆம்பூர்,

ஆம்பூர் அருகே சின்னபள்ளிகுப்பம் இலங்கை அகதிகள் முகாம் அருகே சின்னபள்ளிகுப்பம் - வடச்சேரி செல்லும் சாலையோரம் மதிவாணன் என்பவருக்கு சொந்தமான மூடப்பட்ட தேங்காய் மண்டி உள்ளது. அவ்வழியே நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் சதீஷ்குமார் என்பவர் காரில் சென்றார். அப்போது திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சிறிதுதூரம் சென்று காரை நிறுத்திவிட்டு பார்த்தபோது காரின் கீழ்பகுதி தீயால் கருகிய நிலையில் சேதமடைந்து இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு அதே பகுதியில் மீண்டும் பயங்கர வெடிசத்தம் கேட்டு புகைமூட்டத்துடன் காணப்பட்டது.

இதனால் அருகில் இருந்த விவசாயிகள் வந்து பார்த்தபோது அங்கு நாய் ஒன்று தலை சிதறிய நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இத்தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் பொதுமக்கள் அங்கு வந்து பார்த்தபோது மதிவாணன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பாழடைந்த கிணற்றில் கைப்பை ஒன்றில் மர்ம பொருட்கள் இருப்பதை பார்த்த மக்கள் பீதி அடைந்தனர்.

மறுபடியும் மதியம் 2 மணியளவில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் பயங்கர வெடிசத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது அங்கும் நாய் ஒன்று தலை சிதறி இறந்து கிடந்தது. இதனால் அதனை சுற்றியுள்ள பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் உமராபாத் போலீசார் மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசார் அப்பகுதிக்கு வந்து ஆய்வு செய்தனர்.

மர்ம நபர்கள் காட்டுப்பன்றியை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை (வெங்காய வெடி) சாலையோரம் மற்றும் அங்குள்ள பாழடைந்த கிணற்றில் வீசி சென்று இருக்கலாம் என தெரிகிறது. மேலும் அங்கு கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை தீயிட்டு அழித்தனர். நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அடுத்தடுத்து குண்டு வெடித்து, 2 நாய்கள் தலைசிதறி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story