அன்னா ஹசாரே டெல்லியில் மீண்டும் போராட்டம்


அன்னா ஹசாரே டெல்லியில் மீண்டும் போராட்டம்
x
தினத்தந்தி 19 Feb 2018 10:43 PM GMT (Updated: 19 Feb 2018 10:43 PM GMT)

லோக்பால் சட்டத்தை அமல்படுத்த கோரி அன்னா ஹசாரே டெல்லியில் மீண்டும் போராட்டம 20 பேர் உயர்மட்ட குழுவை அமைத்தார்.

புனே,

காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே, லோக்பால் மசோதாவை வலியுறுத்தி காங்கிரஸ் ஆட்சியின்போது டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் நடத்திய உண்ணாவிரத போராட்டம் நாடு முழுவதும் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேறியது.

ஆனால் இதுவரை லோக்பால் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் வருகிற மார்ச் 23-ம் தேதி முழுமையான லோக்பால் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி டெல்லியில் மீண்டும் போராட்டம் நடந்த உள்ளதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டெல்லியில் மார்ச் 23-ந் தேதி நடைபெற உள்ள போராட்டத்தையொட்டி ‘ஜன் ஜக்ரான் யாத்ரா’ என்ற பயணத்தை தொடங்க உள்ளேன். நாடு முழுவதும் நடைபெற உள்ள இந்த பயணத்துக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள்.

இந்த போராட்டத்தையொட்டி 20 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்துள்ளேன். அவர்கள் இந்த போராட்டத்தை வழிநடத்துவார்கள். பின்னர் இது 40 முதல் 50 பேர் கொண்ட குழுவாக விரிவுபடுத்தப்படும்.

இந்த தடவை நடைபெறும் போராட்டத்தின்போது அடுத்த அரவிந்த் கெஜ்ரிவால் உருவாகிவிட கூடாது என்பதில் நான் உறுதியாக உள்ளேன். இதற்காக குழுவில் இருக்கும் அனைவரிடமும் அவர்கள் எக்காரணத்தை கொண்டும் அரசியல் பிரவேசம் செய்யக்கூடாது என்ற பிரமாண பத்திரத்தை எழுதி வாங்கிக்கொள்வேன். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story