தேர்தல் விதி மீறல் வழக்கில் நடிகர் வையாபுரி விடுதலை தூத்துக்குடி கோர்ட்டு உத்தரவு


தேர்தல் விதி மீறல் வழக்கில் நடிகர் வையாபுரி விடுதலை தூத்துக்குடி கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 20 Feb 2018 9:30 PM GMT (Updated: 21 Feb 2018 12:33 AM GMT)

தூத்துக்குடியில் தொடரப்பட்ட தேர்தல் விதிமீறல் வழக்கில் நடிகர் வையாபுரி நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் தொடரப்பட்ட தேர்தல் விதிமீறல் வழக்கில் நடிகர் வையாபுரி நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

தேர்தல் பிரசாரம்

தூத்துக்குடியில், கடந்த 2014–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து அ.தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளரும், காமெடி நடிகருமான வையாபுரி முக்கிய வீதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் உரிய அனுமதி இல்லாமல் பிரசாரம் செய்ததாக வடபாகம், தாளமுத்துநகர், தென்பாகம் போலீசார் நடிகர் வையாபுரி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு அண்ணாமலை குற்றம் சாட்டப்பட்ட நடிகர் வையாபுரி உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் வக்கீல் கே.பி.செல்வக்குமார் ஆஜர் ஆனார்.

வையாபுரி பேட்டி

இது குறித்து நடிகர் வையாபுரி கூறும் போது, அனுமதி பெறாமல் தேர்தல் பிரசாரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் விடுதலை செய்யப்பட்டு உள்ளேன். தவறு செய்து விட்டு கோர்ட்டுக்கு வந்தால் ஒன்றும் தெரியாது. எந்த தவறுமே செய்யாமல் கோர்ட்டுக்கு வந்தது சிறிது மனக்கஷ்டமாக இருந்தது. மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா இருந்து இருந்தால் வழக்கு முன்பே முடிந்து இருக்கும். நட்சத்திர கலைஞர்களுக்கு கோர்ட்டுக்கு வந்து செல்ல அனைத்து உதவிகளையும் கட்சியில்(அ.தி.மு.க.) இருந்து செய்வார்கள். ஆனால் நான் இங்கு வந்த போது அ.தி.மு.க.வின் எந்த பொறுப்பாளரையும் பார்க்க முடியவில்லை’ என்று கூறினார்.

Next Story